அது வந்து.. என்ன சொல்றது.. காலநிலை மாற்ற மாநாட்டில் தடுமாறிய ஐநா தலைவர்! கூட்டத்தில் திடீர் சலசலப்பு
கெய்ரோ: எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் 27வது காலநிலை மாற்ற மாநாடு (Cop27) நடைபெற்று வருகிறது. இதில் 100க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் காலநிலை மாற்றத்தை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இது வரை மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்னென்ன என்பது குறித்தும் கலந்துரையாடப்படும்.
இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்த ஐநா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் தொடக்கத்தில் தவறான உரையை வாசித்துவிட்டார். இதனால் கூட்ட அரங்கில் சிரிப்பொலி எழுந்தது.
எரிபொருட்களை இனி நம்பக்கூடாது.. உடனே நிறுத்திக்கோங்க.. மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் ஐநா
மாநாடு
காலநிலை மாற்றம் என்பது நாம் எதிர்கொண்டிருக்கும் சமீபத்திய பிரச்னையாகும். அதாவது 1986 பிப்ரவரிக்கு பிறகு பிறந்த எவரும் இதுவரை தங்கள் வாழ்நாளில் இயல்பான மாதத்தை பார்த்திருக்கவில்லை. அந்த அளவுக்கு காலநிலை மாற்றம் தீவிரமடைந்திருக்கிறது. இதனை குறைக்க உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அளித்த பலன்கள் குறித்தும் விவாதம் நடத்தி மேலும் சிறப்பான தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு காலநிலை மாற்ற மாநாடு நடைபெறுகிறது. கடந்த 1995ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டை ஐநா நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டின் மாநாடு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்தம்
இதில் சிறப்புரையாற்றிய அன்டோனியோ குட்டெரெஸ், "காலநிலை மாற்றம் என்பது நம்மை தீவிரமாக பாதித்துள்ளது. சரியாக சொல்வதெனில் ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்துக்கொண்டு காலநிலை மாற்றத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் நாம் அமர்ந்திருக்கிறோம். இதற்கெதிரான போராட்டத்தில் நாம் வெற்றியடையவில்லையெனில் இந்த பூமியை இழந்துவிடுவோம். தற்போது காலநிலை மாற்றத்தின் முக்கிய புள்ளியை பூமி நெருங்கி இருக்கிறது. அடுத்த 15 நாட்கள் நடைபெறும்் விவாதங்களில் ஒரு முக்கியமான ஒப்பந்தம் உருவாக்கப்படும்" என்று அவர் கூறினார்.
போர்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இந்த 15 நாட்கள் முடிவில் நாம் ஒன்று காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்க ஒற்றுமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில், தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி இருக்கும். முதலில் உள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அனைத்து வசதிகளும் நம்மிடமே இருக்கின்றன. இந்த வாய்ப்பின் வாசல் திறந்திருக்கிறது. ஆனால் அது குறைவான அளவே திறந்திருக்கிறது. எனவே நாம் உடனடியாக அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வரும் 10 ஆண்டுகளுக்குள் நாம் இப்போரில் வெற்றியடைய வேண்டும். பூமியை இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டும்." என்று கூறினார்.
சிரிப்பலை
ஆனால் இதற்கு முன்னதாக அவர் உரையாற்ற தொடங்கும் போது நடந்த சம்பவம் கூட்ட அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதாவது, அவர் தனது உரையை மாற்றி மாற்றி படித்துவிட்டார். அதில், "உலகம் இந்த பந்தயத்தில் தன்னை மெதுவாக இழந்து வருகிறது. ஆனால் உங்களால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனெனில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களை நீங்கள் கணக்குப்போட்டு வைத்திருக்கிறார்கள்" என்று வாசித்துவிட்டு சிறிது நேரம் குழம்பி நின்றார். பின்னர் "தவறான உரை கொடுக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்" என சிரித்துக்கொண்டே முணுமுணுத்தார். சில விநாடிகளில் அவரது பணியாளர்கள் அவருக்கு சரியான உரையை கொடுத்தனர். பின்னர் இந்த புதிய உரையை தொடங்குவதற்கு முன்னதாக, சிரித்துக்கொண்டே அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இதனால் கூட்ட அரங்கில் சிரிப்பலை உருவானது.