பூமியை நோக்கி வந்த விண்கலம் வளி மண்டலத்தில் நுழைந்ததும் எரிந்து சாம்பலானது: ரஷ்யா
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து, பூமியை நோக்கி விழுந்த ரஷ்ய ஆளில்லாத விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழைந்ததுமே எரிந்து சாம்பலானதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கடந்த மாதம் கஜகஸ்தானில் இருந்து எம்.27 என்ற ரஷ்ய சரக்கு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்குத் தேவையான பொருட்கள் நிரப்பப் பட்டிருந்தது. புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்தது அந்த விண்கலம். எனவே, அது மீண்டும் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

இதனால், அந்த விண்கலம் பூமியைத் தாக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உண்டானது. ஆனால், அந்த விண்கலம் வளிமண்டலப் பாதைக்குள் நுழைந்ததுமே எரிந்து சாம்பலாகி விடும் என விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
அதன்படி, மாஸ்கோ நேரப்படி இன்று அதிகாலை 05.04க்கு அந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த போது வெடித்து, எரிந்து சாம்பலானது. எனினும் அதன் ஒரு சில சிறிய பாகங்கள் மட்டும் பசிபிக் கடலில் விழும் என எதிர்பார்ப்பதாக ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.
பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த விண்கலம் எங்கு விழுமோ என அச்சப் பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த தகவல் ஆறுதலை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications