ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்திய அமெரிக்கா
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது முதலில் பாராமுகமாக இருந்த அமெரிக்கா பின்னர் தாக்குதல் நடத்த தொடங்கியது. தற்போது போர் விமானங்கள் மூலமாகவும், ஆளில்லாத விமானங்கள் மூலமாகவும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்க மத்திய கமாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தாக்குதலில் தீவிரவாதிகளின் 8 வாகனங்கள் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2 வாகனங்களில் விமான அழிப்பு ஆயுதங்கள் இருந்ததாகவும், ஒரு வாகனத்தில் தீவிரவாதிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களை, ஈராக் அரச படைகளுக்கு ஆதரவாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் நடத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7ம்தேதி முதல் இதுவரை 153 முறை விமான தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.