ஐரோப்பாவில் மீண்டும் ஊரடங்கு.. எதிர்ப்பு தெரிவித்து வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு
நெதர்லாந்து : ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு பிறப்பித்ததை எதிர்த்து சில நாடுகளில் வன்முறை வெடித்துள்ளது. .
கொரோனா அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் 20 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்திலும் கடந்த சனிக்கிழமை முதல் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டயாம் என உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

லட்சக்கணக்கானோர் பலி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இறந்து போனவர்கள் எண்ணிக்கை, 51.73 லட்சத்தைத் தாண்டி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வந்து அதன் தாக்கம் குறையத் தொடங்கினாலும் இன்னும் பல நாடுகள் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 25.83 கோடியை தாண்டிவிட்டது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23.37 கோடியை எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 51.73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1.94 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி கட்டாயம்
கொரோனவை ஒழிப்பதற்கு சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் மட்டுமின்றி தடுப்பூசியும் அவசியம் என புரிந்து கொண்ட நாடுகள் மக்களை காப்பாற்ற அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி, விமானத்தில் பயணம் செய்யவும், வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள்
இந்நிலையில் கொரோனா ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தொடங்கி விட்டது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது. சில இடங்களில் ஊரடங்கும் அறிவித்துள்ளது. மேலும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களுக்கு வரவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் ஊரடங்கு
ஆஸ்திரியாவில் முழுஊரடங்கு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு உத்தரவு 20 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்ற உத்தரவு பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தல் கடந்த சனிக்கிழமை முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

கலவரக்காரர்கள் வன்முறை
ஏற்கனவே கொரோனா காரணமாக பொருளாதாரத்தை இழந்துள்ள பொதுமக்கள், மீண்டும் இதுபோன்ற உத்தரவுகளால் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் ஐரோப்பாவின் பல நாடுகளில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிப்பு, பொதுச் சொத்துக்கள் சேதம் என நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் செய்வதறியாது அந்நாட்டு அரசுகள் கவலை தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. வன்முறை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. கலவரக்காரர்கள் கற்களை வீசுவதும், போலீஸ் வாகனங்களை எரிப்பதும் இந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரியாவிலும் ஆர்ப்பாட்டம்
கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஐந்தாவது அலைக்கு பயந்து, பிரான்சும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அங்கே ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து, ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் ஐரோப்பிய நாடுகளில் உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் போன்ற பொது இடங்களிலிருந்து தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு கட்டாயம் அனுமதி தரக்கூடாது என அறிவித்துள்ளன.

அமெரிக்கா திட்டவட்டம்
கொரோனா அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பொருளாதாரத்தை பாதிக்கும் ஊரடங்கு உத்தரவு அமெரிக்காவில் அமல்படுத்தமாட்டோம் என வெள்ளை மாளிகையின் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் 82 சதவீதம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ளதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications