அதென்ன "ரத்த பணம்?" நிமிஷா பிரியாவை காப்பாற்ற இதுதான் ஒரே வழி.. எவ்வளவு தர வேண்டி இருக்கும்?
சனா: ஏமன் நாட்டில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு அடுத்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. நிமிஷா பிரியாவை காப்பாற்றப் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ப்ளட் மணி (Blood money) வாங்க ஒப்புக்கொள்வது மட்டுமே இப்போது ஒரே ஆப்ஷனாக இருக்கிறது. அதென்ன ரத்தப் பணம்.. இதன் மூலம் ஒருவரை மரண தண்டனையில் இருந்தும் காப்பாற்ற முடியுமா.. இதற்கு முன்பு யாராவது இதுபோல காப்பாற்றப்பட்டுள்ளனரா என்பது குறித்து நாம் பார்க்கலாம்..
ஏமன் நாட்டில் கடந்த 2008ம் ஆண்டு முதல் வேலை செய்து வருபவர் நிமிஷா பிரியா. இவர் அங்குக் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். அதாவது இவரது பாஸ்போர்ட்டை ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவர் பிடுங்கி வைத்து மிரட்டிய இருக்கிறார். அந்த நபருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு பாஸ்போர்ட்டை எடுக்க நிமிஷா பிரியா முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மயக்க மருந்து டோஸ் அதிகமாகப் போகவே அவர் உயிரிழந்தார்.

நிமிஷா பிரியா
இதன் காரணமாகவே நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் ஒரு வாரக் காலம் மட்டுமே இருக்கிறது. சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டது. இப்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ரத்தப் பணத்தை வாங்கி நிமிஷா பிரியாவை மன்னிப்பது மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது.
ப்ளட் மணி என்றால் என்ன!
பொதுவாக, நம் நாட்டில் குற்ற வழக்குகளில் ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கும். பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்பத்தினர் மன்னித்தாலும், மன்னிக்காவிட்டாலும் குற்றவாளிக்கு எந்தச் சலுகையும் இருக்காது. சட்டப்படியே தண்டனை வழங்கப்படும். அதில் மாற்றம் இருக்காது.
ஆனால், ஷரியா சட்டத்தைப் பின்பற்றும் ஏமன் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளில் 'திய்யா' அல்லது ரத்தப் பணம் என்று ஒன்று இருக்கிறது. கொலை போன்ற கடுமையான குற்றங்களில் இந்த ரத்தப் பணம் என்ற விஷயம் உள்ளே வரும்.. இதுபோல பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்குக் குற்றவாளி நிதி இழப்பீடு வழங்குவது தான் 'திய்யா' என்று அழைக்கப்படுகிறது.
எதற்குப் பயன்படும்!
மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளைத் தவிர்க்கவே இது பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பண இழப்பீடு வழங்குவதன் மூலம் குற்றவாளிக்குத் தண்டனை குறைக்கப்படும் அல்லது தண்டனையில் இருந்து தப்பலாம். இந்த முறையானது குற்றவாளியின் தலைவிதியைப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் கையில் ஒப்படைக்கிறது.
அதேநேரம் குற்றவாளியை மன்னிக்கக் குறிப்பிட்ட தொகையைத் தான் ரத்தப் பணமாக வாங்க வேண்டும் என எந்தவொரு விதிமுறைகளும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் எந்தத் தொகையை வேண்டும் என்றாலும் கேட்கலாம்.. அதை இரு தரப்பும் பேசி முடிவு செய்யப்பட வேண்டும். இப்படித் தான் சவுதியில் சிறுவன் மரணம் தொடர்பாக 18 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த அப்துல் ரஹீம் ரூ.34 கோடி ரத்தப் பணம் கொடுக்கப்பட்ட பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நிமிஷா பிரியா வழக்கு
நிமிஷா பிரியா வழக்கைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தை குழு கொலை செய்யப்பட்ட மஹ்தி குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி) நிதி உதவியை வழங்க முன்வந்தது.. மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அல்லது அவர்கள் சொல்லும் நபருக்கு கேரளாவில் இலவசமாகச் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது. வந்து செல்லத் தேவையான விமான டிக்கெட் உட்பட அனைத்துச் செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.. மேலும், மஹ்தி சகோதரர் ஐக்கிய அமீரகம் அல்லது சவுதியில் குடியேற முடிவு செய்தால் அந்தத் தொகையை ஏற்கவும் முன்வந்துள்ளது.
ஒப்புக்கொள்ளவில்லை
இவ்வளவு உதவிகளைச் செய்ய பேச்சுவார்த்தை குழு முன்வந்துள்ளது. ஆனால், மஹ்தி குடும்பத்தினர் இதுவரை இதை ஏற்கவில்லை. அவர்கள் தரப்பில் இருந்து எந்தவொரு ரெஸ்பான்ஸும் இல்லை. மரண தண்டனைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திச் சம்மதிக்க வைத்தால் மட்டுமே நிமிஷா பிரியாவை காப்பாற்ற முடியும்.












Click it and Unblock the Notifications