"ஜப்பானே அழிந்துவிடும்.." டாப் வல்லுநர் சொன்ன பகீர் தகவல்.. என்ன செய்தாலும் சரியாகாது போலயே! பரபர
ஜப்பான் மக்கள் தொகை சரிவு இப்போது உலக நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
டோக்கியோ: ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. இது அந்நாட்டிற்கு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக ஜப்பான் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் என்ன பிரச்சினை.. இதற்கான தீர்வு என்ன என்பதைப் பார்க்கலாம்.
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு மக்கள் தொகை தான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள்தொகை அதிகரிப்பது பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், பல வளர்ந்த நாடுகளில் நேர்மாறாக மற்றொரு பிரச்சினை இருக்கிறது.
அதாவது அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மக்கள் தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. இப்படித் தொடர்ந்து மக்கள் தொகை குறைவது அந்நாட்டின் வருங்கால வளர்ச்சியைக் கூட பாதிக்கும் ஆபத்து இருப்பதாலேயே உலக நாடுகள் இந்த விவகாரத்தில் கவலை கொள்கின்றன.

மக்கள் தொகை
அப்படி மக்கள் தொகை சரிவதால் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளும் நாடாக ஜப்பான் இருக்கிறது. உலக அளவில் வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக ஜப்பான் இருக்கிறது. குழந்தைகளைப் பராமரிக்க அதிக செலவாகிறது உள்ளிட்ட காரணங்களால் இளைஞர்களும் குழந்தையைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு மக்கள் தொகை தொடர்ந்து சரிந்தே வருகிறது. இது அந்நாட்டிற்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

ஜப்பான்
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியாவிட்டால்... அது நாட்டின் சமூகப் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் ஆபத்து இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமரின் ஆலோசகர் மசாகோ மோரி கூறுகையில், "இப்போது நாட்டில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தே இருக்கிறது. நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால்.. ஒரு கட்டத்தில் நாடே அழிந்துவிடும். அப்போது வாழும் மக்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்வார்கள். இது ஒரு பயங்கரமான நோயாகும்.

சரியும் மக்கள் தொகை
இது நமது வருங்கால தலைமுறைகளைக் கடுமையாகப் பாதிக்கும்" என்றார். அங்கு சில ஆண்டுகளாகவே புதிதாகப் பிறந்தவர்களைக் காட்டிலும் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது. கடந்தாண்டு அங்கு 8 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், 15.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது ஜப்பான் நாட்டிற்கு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2008இல் ஜப்பான் மக்கள் தொகை அதிகபட்சமாக 12.8 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது அது 12.4 கோடியாக சரிந்துள்ளது.

ஏன் ஆபத்து
அதேபோல அங்கு ஒட்டுமொத்த மக்கள்தொகையில் இருக்கும் வயதானோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இப்போது அங்கு மக்கள்தொகையில் சுமார் 29% பேர் 65 வயதைக் கடந்தவர்களாகும். முதியவர்களால் இளைஞர்களைப் போல வேலை செய்ய முடியாது. எனவே, முதியவர்களை அதிகரிப்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் உற்பத்தியையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை படிப்படியாகக் குறையவில்லை.. ஒரே அடியாகக் குறைகிறது என்றும் இது மிகப் பெரிய பிரச்சினை என்றும் ஜப்பான் எம்பி மோரி தெரிவித்துள்ளார்.

பெரிய சிக்கல் என்ன
அடுத்து வரும் காலத்திலும் இதே நிலை தொடர்ந்தால்.. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் பல பிரச்சினைகள் இருக்கும் என்றால். மேலும், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால்.. சமூகப் பாதுகாப்பு அமைப்பு வீழ்ச்சியடையும், தொழில்துறை மற்றும் பொருளாதார வலிமை குறையும் என்றும் மேரி தெரிவித்தார். மேலும், இதனால் ராணுவத்திற்கும் கூட ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார். குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவது நிலைமையை மாற்றுவதை மேலும் சிக்கலானதாக மாற்றுகிறது..

ஜப்பான் அரசு
இதனால் அரசு உடனடியாக நிலையை மாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என மேரி தெரிவித்துள்ளார். நிலைமையின் தீவிரமின்மையை ஜப்பான் அரசும் கூட உணர்ந்தே இருக்கிறது. இதன் காரணமாகவே குழந்தையைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இப்போது கூட குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலான புதிய திட்டங்களை அறிவித்துள்ளனர். இதன் பலன் தருமா என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்.

வல்லுநர்கள் அட்வைஸ்
குழந்தை பெற்றுக் கொண்டால் உதவித் தொகை, பராமரிப்பிற்குத் தனி தொகையை அறிவித்துள்ளனர். இருப்பினும், பணத்தைக் கொடுப்பது மட்டுமே அனைத்து சிக்கலையும் சரி செய்யாது என்று அங்குள்ள வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதில் பெண்களின் சுமையைக் குறைக்க வேண்டும்... பிரசவத்திற்குப் பிறகு அவர்கள் எளிதாக வேலைக்குத் திரும்புவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பிரச்சினையைச் சரி செய்ய முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications