'2022இல் கொரோனா பெருந்தொற்று நிச்சயம் முடிந்துவிடும்.. ஆனால் ஒரு கண்டிஷன்..' புதிர் போடும் WHO
ஜெனீவா: கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டுடன் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பொய்யாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு
இந்நிலையில், மீண்டும் மீண்டும் பரவும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா பரவ தொடங்கி 3ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. அடுத்தாண்டு உலகம் சந்திக்கும் முக்கிய சுகாதார பிரச்சினையாக கொரோனா பரவல் மட்டும் இருக்காது.

அடுத்த பெருந்தொற்று
ஏனென்றால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உடன் உலகம் போராடிக் கொண்டிருந்ததால், நமது மக்களுக்கு வழக்கமாக இதர வேக்சின்கள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, இதர நோய்ப் பாதிப்புகளுக்கான சிகிச்சை கூட கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் மீண்டும் ஒரு பெருந்தொற்று ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும். இதற்காக WHO BioHub Systemஐ நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

ஒரே இலக்கு
கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். தற்போதைய சூழலில் முடிந்த வரை அனைவருக்கும் வேக்சின் செலுத்துவதே உலக நாடுகளின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். 2022 மத்திய பகுதிக்குள் உலகில் இருக்கும் குறைந்தபட்சம் 70% மக்களுக்கு நாம் முழுவதுமாக வேக்சின் போட்டிருக்க வேண்டும். இது தான் உலக நாடுகளில் ஒரே இலக்காக இருக்க வேண்டும்.

நிறுத்தாலம்
எந்தவொரு நாடும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்கவில்லை. ஆனால், இப்போது கொரோனாவை எதிர்கொள்ள நம்மிடம் பல புதிய கருவிகள் உள்ளன. இந்த ஆண்டு கொரோனாவை நாம் வீழ்த்திவிடுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது ஆனால், இதற்கு ஒரு கண்டிஷன் உள்ளது. நாம் எந்தளவு வேக்சின் பாகுபாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறோமோ அவ்வளவு விரைவாக இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரலாம். இல்லையென்றால் இந்த வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளது" என்றார்.

ஓமிக்ரான் பாதிப்பு
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் கொரோனாவை உலக சுகாதார அமைப்பு ஆபத்தான கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் கொரோனா டெல்டா வகையைக் காட்டிலும் வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் தங்கள் நாட்டில் 3ஆம் அலை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தென் ஆப்பிரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications