வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம்.. ஐ.நா. விசாரணைக்கு உலகத் தலைவர்கள் கோரிக்கை
லண்டன்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைன்- ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் பிலிப் ஹேமன்ட் இதுகுறித்துக் கூறுகையில், ஐ.நா. தலைமையிலான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும். இதுகுறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்ட வேண்டும்.
உக்ரைனின் போர்ப் பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளதையே இது காட்டுகிறது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் முக்கியமானது. நடந்த சம்பவத்தின் உண்மைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
துரித விசாரணை தேவை- ஐரோப்பிய கவுன்சில் வலியுறுத்தல்
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மனுவல் பரோசா மற்றும் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஹெர்மன் வான் ரூம்பி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இதில் விரைவான, துரிதமான விசாரணை அவசியம். உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வெளிப்படையான விசாரணைக்கு பான் கி மூன் விருப்பம்
ஐ.நா. பொதுச் செயாளர் பான் கி மூனும் கூட சர்வதேச அளவிலான, முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - புடின்
ரஷ்ய அதிபர் புடினும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விபத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு ரஷ்ய ராணுவத்தைக் கேட்டுள்ளேன். இந்த குற்றச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் உக்ரைன் மீதுதான் இந்த விவகாரத்தில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட வேண்டும். அந்த நாட்டிற்குள்தான் சம்பவம் நடந்துள்ளது. அந்த நாடுதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று புடின் கூறியுள்ளார்.
ஆனால் ரஷ்ய ராணுவம் அல்லது ரஷ்ய ஆதரவாளர்கள்தான் விமானத்தை தாக்கியுள்ளதாக உக்ரைன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பிரதமர் அதிர்ச்சி
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், இது எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை அறியுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.