1.5 ஆண்டுகள் ஆச்சு.. இதுவரை எங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை.. அடித்து கூறும் வடகொரியா
பியோங்யாங்: உலகமே கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா கண்டறியப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தொடங்கி, பிரிட்டன், ஜெர்மனி என அனைத்து வளர்ந்த நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் என அனைத்திலும் கொரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கும் இல்லை
கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன என்றே கூட கூறலாம். இந்நிலையில், தனது நாட்டில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தெரிவித்துள்ளது, இதுவரை நாட்டில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் அதில் யாருக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
சர்வதேச வல்லுநர்கள்
கடந்த ஜூன் 4 முதல் 10 வரை சளி பாதிப்பு உடைய 149 பேர் உட்பட 733 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும், வடகொரியாவின் இந்தக் கூற்றை சர்வதேச வல்லுநர்கள் நம்பவில்லை.
சந்தேகம்
வடகொரியா கிட்டதட்ட தனது அனைத்து வர்த்தகத்திற்கும் சீனாவை நம்பியுள்ளது. அப்படியிருக்கும் பொது கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்காது என்பது வல்லுநர்களின் கருத்து. மேலும், வடகொரியாவில் மோசமான சுகாதார உட்கட்டமைப்பு இருப்பதால் கொரோனாவால் உயிரிழப்புகள்கூட அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
வடகொரியா
கொரோனா பெருந்தொற்று கரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு வடகொரியா தடை விதித்துள்ளது. மேலும்,வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்டவர்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் பொருதாளாதர தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாவின் பொருளாதாரத்திற்கு இது கூடுதல் சுமையையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சர்வதேச போக்குவரத்து தொடங்க இன்னும் சில காலம் ஆகும் எனக் குறிப்பிட்டனர்.