பதவிக்கு 'உலை'.. பதற்றமே இல்லாமல் யு.எஸ். யோகா தினவிழாக்களில் சுஷ்மா!
நியூயார்க்: சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் யோகா ஒரு மதத்துக்கானது அல்ல.. ஆன்மா, உடலை ஒருங்கிணைக்கும் அறிவியல் என்று நியூயார்க்கில் ஐ.நா. சபையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
'தேடப்படும் குற்றவாளி' லலித் மோடிக்கு உதவியதால் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவரது அமைச்சர் பதவி எந்த நேரத்திலும் பறிபோகலாம் என்ற நிலையில் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய சர்வதேச யோகா தின விழாவில் நேற்று அவர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம்தான். அதை யோகாவால் நாம் இணைக்க முடியும். இன மோதல்கள், வன்முறை ஆகியவை மனித சமூகத்துக்கான அச்சுறுத்தலாகத் திகழுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழியாக யோகா விளங்க முடியும். யோகா என்பது மதம் சார்ந்தது அல்ல. அது ஆன்மாவையும், உடலையும் ஒருங்கிணைக்கும் அறிவியல்.
இந்தியாவில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகா தோன்றிவிட்டது. யோகா என்பது இந்தியாவின் ஆன்ம பலத்தை வெளிப்படுத்துகிறது.
இதே ஐ.நா. சபையில் யோகாவை அங்கீகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டார். அடுத்த 75 நாள்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ந் தேதியை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ததற்காக 177 நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. சபை பொது அவையின் தலைவர் சாம் குடேசா, வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,
டைம்ஸ் சதுக்கத்தில்..
இதேபோல் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீங்கள் அனைவருமே யோகா தூதர்களே என்றார்.