தாக்கப்பட்ட காஞ்சி அர்ச்சகர்-மது போதையில் சண்டை போட்டதை மறைக்க போலீசில் பொய் புகார் தந்தது அம்பலம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அர்ச்சகரை திமுகவினர் தாக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டதன் பின்னணியை போலீசார் அம்பலப்படுத்தி இருக்கின்றனர்.
காஞ்சிபுரத்தச் சேர்ந்தவர் அர்ச்சகர் ஷேசாத்ரி. இவர் உலகளந்த பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிகிறார். இவர் கொடூரமாக தாக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
அர்ச்சகர் மீது தாக்குதல்
அந்த படங்களில் சேஷாத்ரியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது; அத்துடன் அவரது உதடும் கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிலர், கோவில் திருப்பணியில் ஈடுபட்டிருந்த சேஷாத்ரியை சில குண்டர்கள் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்க இருக்கிறேன். காஞ்சிபுரத்தில் உள்ள யாராவது அந்த அர்ச்சகருக்கு உதவ வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
சமூக விரோதிகள் தாக்கியதாக புகார்
காஞ்சிபுரம் அர்ச்சகர் சேஷாத்ரி இப்படி தாக்கப்பட்டதாக வெளியான பதிவுகள் சில ஊடகங்களிலும் பதிவானது. அதில், கோவில் நிலத்தில் கார் பார்க்கிங் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார் சேஷாத்ரி. அப்படி எதிர்ப்பு தெரிவித்த சமூக விரோதிகள் சேஷாத்ரியை தாக்கிவிட்டனர் எனவும் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசிலும் சேஷாத்ரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் எல்லாம் தலைகீழ்
இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் சேஷாத்ரியின் வீடியோவை பெற்று வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தகவல்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியை தரக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் சேஷாத்ரி, கோவில் திருப்பணியில் ஈடுபட்ட போதும் தாக்கப்படவில்லை; கார் பார்க்கிங் விவகாரத்திலும் தாக்கப்படவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்புறம் என்னதான் நடந்தது?
|
மதுபோதையில் தகராறு அம்பலம்
இது தொடர்பாக சின்ன காஞ்சி போலீசார் கூறுகையில், காஞ்சிபுரம்- வாலஜாபாத் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சேஷாத்ரி மற்றும் அவரது நண்பர் ஒருவர் இணைந்து மது அருந்தி உள்ளனர், மது அருந்திவிட்டு பின்னர் டவுன்பேங்க் எதிரே உள்ள ராயல் பிரியாணி கடைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாப்பிடுவதற்காக காரை ஓரமாக நிறுத்தி வைத்தனர் சேஷாத்ரியும் அவரது நண்பரும். இந்த நிலையில் சேஷாத்ரி, அவரது நண்பரின் இன்னோவா கார் அருகே காஞ்சிபுரம் மாநாகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனத்தை நிறுத்தி இருந்தனர். ராயல் பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த சேஷாத்ரியும் அவரது நண்பரும் இன்னோவா காரை எடுக்க முயற்சித்தனர். இதற்காக தூய்மை பணி வாகன ஓட்டுநரை அழைக்கும் வகையில் இடைவிடாமல் ஹாரன் அடித்திருக்கின்றனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மை பணி வாகன ஓட்டுநருடன் சேஷாத்ரி, அவரது நண்பர் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாகிப் போனது. இதில்தான் சேஷாத்ரியின் உதடு கிழிந்து நெற்றியில் படுகாயம் ஏற்பட்டதாம். இதனை மறைக்கவே, வேறு ஒரு பொய்யான காரணத்தை தாம் கூறிவிட்டதாக போலீசிடம் இப்போது கூறியிருக்கிறார் சேஷாத்ரி எனகின்றன காவல்துறை வட்டாரங்கள். இது தொடர்பான தகவல்கள்தான் இப்போது சமூகவலைதளங்க்ளில் அதிகமான பேசு பொருளாகி இருக்கிறது.