பரந்தூர் மக்களை பனையூருக்கு அழைத்த விஜய்.. 2 முறை மிஸ்ஸான சந்திப்பு.. விஜய் நேரில் வர காரணம் என்ன?
காஞ்சிபுரம்: பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 2 முறை பனையூரில் சந்திக்க அழைத்துள்ளார். அந்த சந்திப்பு 2 முறை மிஸ்ஸான நிலையில், இம்முறை பரந்தூர் மக்களை நேரடியாக சந்திக்க வருவது தெரியவந்துள்ளது.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 910-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சென்னையில் 2வது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராடி வருகின்றனர்.

இவர்களுடன் தமிழக அரசு தரப்பில் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போது, இதுவரை போராட்டம் முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனிடையே பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவளித்தனர். இதனிடையே விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் நேரடியாக களத்திற்கு வருகிறார். இதற்காக காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் போராட்டக் குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விஜய் சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் பேசுகையில், இன்றுடன் 910வது நாளாக பரந்தூரில் போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை திருமாவளவன், அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், சீமான், வேல்முருகன், சிபிஐ, சிபிஎம் என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எங்களை சந்தித்துள்ளனர். எங்களுக்கு எந்த பின்புலமும் கிடையாது. எங்களை யாரும் இயக்கவில்லை.
தவெக தலைவர் விஜயை சந்திக்க மக்கள் இயக்கம் மூலமாக தொடர்பு கொண்டோம். அந்த சந்திப்பு சிறிது நாட்கள் தள்ளிப்போனது. ஒரு மாதத்திற்கு முன்பாக விஜயை சந்திக்க எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் எங்களால் பனையூர் சென்று விஜயை சந்திக்க முடியவில்லை. இரு முறையும் எங்களால் தள்ளிப்போனது. இதனால் விஜய் நேரில் வந்து களத்தில் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கான பணிகளை நாங்கள் செய்தோம். தவெக தரப்பில் ஏகனாபுரத்தில் மக்களை சந்திக்க கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு கருதி வீனஸ் திருமண மண்டபத்தில் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்களும், கட்சியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் காவல்துறையினர் விஜய்-க்கு அனுமதி வழங்கவில்லை. விஜய் வருவதால், அனைவரின் பார்வையும் பரந்தூர் பக்கம் திரும்பியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications