அனைத்து பாடங்களுக்கும் பொது நுழைவு தேர்வு.. மத்திய அரசு புதிய திட்டம்.. கல்வித்துறை அமைச்சர் தகவல்
காஞ்சிபுரம்: அனைத்து பாட துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறினார்.
மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் 2 நாள் அரசு பயணமாக நேற்று இரவு காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். இன்று காலை உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்று காமாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.
மேலும் காமாட்சியம்மனை தரிசிக்க வந்த அவருக்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு அம்பாளின் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் பணி 2026ல் தான் முடியும்.. கொரோனா மீது பழிபோட்ட மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்!
மாணவிகளுடன் கலந்துரையாடல்
இதையடுத்து அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மாணவ மாணவிகள் புதிய கல்வி பாடத்திட்டங்கள் குறித்து கேட்டு அதற்கான விளக்கங்களை பெற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறுகையில்,
கண்ணாடி பொருத்த வேண்டும்
கல்வியாளர்களுக்கு கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பெரிய கண்ணாடியை பொருத்த வேண்டும். அதை மாணவர்கள் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் பல்வேறு அம்சங்களை பற்றி அறிந்து கொள்வார்கள். இது சுய நினைவை மேம்படுத்த உதவும்.
அனைத்துக்கும் ஒரே தேர்வு
நீட் தேசத்தின் பொதுவான நுழைவுத் தேர்வு. இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்திட மத்திய திட்டமிட்டு அது குறித்து அரசு யோசித்து வருகிறது.
புதிய கல்வி கொள்கை
நாட்டின் சிறந்த கல்வி குறித்து புகழ்பெற்ற விஞ்ஞானி தலைமையிலான குழு மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-யை மத்திய அரசு அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும்'' என்றார்.