அல்லோலுயா..ஜெய் ஸ்ரீராம்! ஒரு போஸ்டருக்கு போரா? ஜெபக் கூட்டத்தில் காவிக் கொடியுடன் ரகளை! பரபர குமரி!
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்துக்கு காவி கொடியுடன் புகுந்து ரகளை செய்ததாக, 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் வீரபாகுபதி. இங்கு அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ ஜெபக்கூடம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜெபக்கூடம் அமைந்துள்ள தெருவில் கடந்த 3 மாதங்களாக தெருவிளக்கு கேட்டு அப்பகுதியை சேர்ந்த 15 வது வார்டு கவுன்சிலர் விஜயகல்யாணி என்பவரிடம் ஜெபக்கூடத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
போஸ்டர்
ஆனால் புத்தளம் பேரூராட்சி யில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திமுகவை சேர்ந்த பேரூர் செயலாளர் பிரதாப் சிங் என்பவரிடம் ஜெபக்கூடத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் 2 வது நாளில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கோரிக்கை வைத்தும் தெரு விளக்கு அமைக்கவில்லை ஆனால் பிரதாப் சிங் 2 நாளில் தெருவிளக்கு அமைத்து கொடுத்துள்ளார் எனவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
ஜெபக்கூடம்
இதில் ஜெபக்கூடத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி போஸ்டர்கள் ஒட்டியுள்ளதை கண்டித்தும், இப்பகுதியில் இப்படி ஒரு ஜெபக்கூடம் கிடையாது எனக்கூறியும் கண்டன போஸ்டர்களை எதிர் தரப்பினர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கடந்த ஒரு வாரமாக ஜெபக்கூடத்தின் முன்பு அனுமதியின்றி ஜெபக்கூடம் நடைபெறுவதாக இந்து முன்னணி உட்பட சங்பரிவார் அமைப்பினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர்.
காவிக் கொடியுடன் ரகளை
நேற்று அதேப்போன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடையையும் மீறி ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களையும் தடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலான நிலையில் சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஜெபசிங் என்பவரது புகாரின் பேரில் இந்து முன்னணியினர், வார்டு கவுன்சிலர் உட்பட 8 பேர் மீது அத்துமீறி தகாத வார்த்தைகள் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்து முன்னணியினர் கைது
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் அரிய பெருமாள் விளையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர். தெருவிளக்கு தொடர்பான பிரச்சினை மதமோதலை ஏற்படுத்தும் விதமாக மாறிய விவகாரம் வீரபாகுபதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.