மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் - இன்று ஒடுக்குபூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. இன்றைய தினம் ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசி திருவிழாவில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் குவிந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ஆம் திருநாளன்று இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடந்தது.
இப்பூஜை வருடத்தில் மூன்று முறை நடைபெறும். கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், மாசித் திருவிழாவின் ஆறாம் நாள் அன்றும், மீன பரணி கொடை விழா அன்றும் மகாபூஜை நடைபெறும். விழாவின் 9ஆம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்தார்.
உலா வந்த அம்மன்
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்தார். மாபெரும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
அம்மன் ஊர்வலம்
மாசி திருவிழாவில் கடைசி நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வந்தனர். இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வந்தார்.
ஒடுக்கு பூஜை பவனி
இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் சிறப்பம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயார் செய்யப்படுகிறது. பின்னர் சன்னதி அருகில் உள்ள சாஸ்தா கோவில் பக்கமிருந்து ஒடுக்கு பூஜை பவனி வருகிறது.
தலையில் சுமக்கும் பூசாரிகள்
பூஜைக்கு எடுத்து செல்லப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருவார்கள். பின்னர் கோவிலை ஒருமுறை வலம் வந்து அம்மன் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும் பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.
பக்தர்கள் திரண்டனர்
அதனைத் தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பூஜை காண கோவில் வளாகத்திலும், ஒடுக்கு பவனி வரும் வளாகத்திலும் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.