45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.. படகில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வந்த 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்துள்ளார். அதன்பிறகு திருவள்ளுவர் சிலைக்குச் சென்று மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிபேட் தளத்துக்கு புறப்பட்டார்.
மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் லோக்சபா வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வந்தார் பிரதமர் மோடி.

சுவாமி விவேகானந்தர் இதே விவேகானந்தர் பாறையில் கடந்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்தார். அதே இடத்தில் தான் தற்போது விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் தான் பிரதமர் மோடி 3 நாள் தியானம் மேற்கொண்டு வருகிறார். எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மாலை 6.45 மணியளவில் தியானத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து தியானம் செய்து வந்த அவர், இன்று பிற்பகல் வரை தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் செய்தார்.
இதற்காக பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தியான மண்டபத்திலும், அவர் தங்கும் அறையிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை பகுதியில் சிறப்பு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்த நிலையில், இந்த 3 நாட்களும் அவர் இளநீர், திராட்சை உள்ளிட்ட பழங்களின் ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை மட்டுமே பருகி வந்தார்.
இன்று மூன்றாவது நாளாக தியானத்தை தொடர்ந்தார் பிரதமர் மோடி. ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டு வந்தார் மோடி. இன்று பிற்பகல் 2 மணி வரை 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்தார். தியான மண்டபத்தில் இருந்து மாலை 2.45 மணியளவில் அவர் வெளியே வந்தார்.
தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப் படகில் பிரதமர் மோடி சென்றார். பின்னர் அவர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.
இன்று காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதற்காக தியானத்தை நிறுத்திவிட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி. கடுமையான மேகமூட்டம் காரணமாக சிறிது நேரத்திலேயே மீண்டும் உள்ளே சென்று தியானத்தை தொடர்ந்து வந்தார்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விவேகானந்தர் மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் கடந்த 45 மணி நேரமாக தியானம் மேற்கொண்டு வந்த பிரதமர் மோடி, தற்போது தியானத்தை நிறைவு செய்துள்ளார். தியானம் முடிந்து, விவேகானந்தர் தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி படகில் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார்.
133 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு திருவள்ளுவரின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கிருந்து கிளம்பிய பிரதமர் மோடி தனி படகில் கரைக்கு வந்து அங்கிருந்து கான்வாயில் அரசு விருந்தினர் மாளிகை அருகே உள்ள ஹெலிபேட் தளத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.











Click it and Unblock the Notifications