திருமணத்தை தடுக்கின்ற நல் உள்ளங்களுக்கு நன்றி... போஸ்டர் ஒட்டிய இளசுகள் - மன உளைச்சலில் முதியவர்
வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: சிலருக்கு திருமணம் முடிவது போல வந்து தடை பட்டு போகும். மாப்பிள்ளை வீடு பார்க்க வரும் போதே அவரைப் பற்றி இல்லாததை சொல்லி போட்டுக்கொடுத்து சிலர் திருமணத்தை தடுத்து விடுவார்கள். நல்ல நேரம் கூடு வந்தால் சிலருக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஒரு வித்தியாசமாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் வைரலானது. அந்த போஸ்டரில் வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என்ற வாசகங்கள் இருந்ததுதான் வைரலாகக் காரணம்.
Recommended Video
சினிமாவில்தான் ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கும் புறனி பேசுபவர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்துவார்கள். வரன் வீட்டாரிடம் எதையாவது சொல்லி ஓட வைத்து விடுவார்கள். இதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக இளைஞர்கள் வரன் பார்ப்பதும் வரன் சம்பந்தமாக பெண் வீட்டார் இளைஞர்களின் சொந்த ஊரில் விசாரிக்க செல்லும் போது சில ஆசாமிகள் புறம் பேசி வரன்களை தடுப்பதும் தொடர்கதை ஆகி வந்தது.
திருமணம் தடை பட்ட இளைஞர்களோ வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர் சங்கம் என்றும் மொட்டையாக பேனர் வைப்பதும் போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்தனர். தற்போது வயதானவரின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர் இளைஞர்கள். இந்த போஸ்டர் அந்த முதியவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவே அவர் மான நஷ்ட வழக்கு தொடுக்கப் போகிறார்.

திருமணம் விலக்குவோர் சங்கம்
குளச்சல் அருகே அயினி விளை, பிச்சன் விளை, இளைஞர்கள் ஒருபடி மேலே சென்று அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் பெஞ்சமின் என்பவர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உக்கார்ந்திருக்கும் போட்டோவை போஸ்டரில் போட்டு திருமணம் விலக்குவோர் சங்க தலைவர் என்றும் தொழில் திருமண வரன் தடுத்தல் என்றும் உப தொழில் பலசரக்கு வியாபாரம் என்றும் சுய விபர குறிப்போடு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மனமார்ந்த நன்றி
வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என்று அயினி விளை, பிச்சன்விளை, பகுதி மட்டுமில்லாமல் குளச்சல், கருங்கல் பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

பெஞ்சமின் விளக்கம்
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போஸ்டர் குறித்த செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவியது. இதுகுறித்து பேசிய பெஞ்சமின், தான் 50 வருடங்களுக்கு மேலாக இந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருவதாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்தோடு சில இளைஞர் இந்த செயலை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மன உளைச்சல்
மன உளச்சலில் இருக்கும் தான் இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு மான நஷ்ட வழக்கும் தொடர போவதாகவும் கூறினார். இந்த போஸ்டர் சம்பவம் கன்னியாகுமரியில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications