இது தான் எனது ஆசை! அதை நிறைவேற்றுவீர்களா! கரூரில் உறுதி வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
கரூர்: திருப்பூருக்கு இணையாக கரூர் இன்னும் வளர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அதனை நிறைவேற்றுவீர்களா எனக் கேட்டு கரூர் தொழில் முனைவோர்களிடம் ஸ்டாலின் உறுதி வாங்கியுள்ளார்.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே ஆரோக்யமான தொழில் போட்டிகள் இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்கள் வளர்ந்தால் தான் மாநிலம் வளரும் என்பதால் இதனைக் கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இரவில் திடீர் ஆலோசனை.. இன்றும் ஈபிஎஸ் வீட்டுக்கு போன முக்கிய புள்ளிகள் - சிக்னல் கொடுத்த எடப்பாடி!
கரூரில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
ஜவுளித்தொழில்
''ஜவுளித்தொழிலில் தலைசிறந்து விளங்கும் கரூர் மாவட்டத்தில், இந்தத் தொழிலை மேலும் மேம்படுத்திட சிப்காட் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் இப்போது நடைபெறத் தொடங்கி இருக்கிறது. நேற்று இரவு நான் கரூருக்கு வந்தவுடனே இந்த மாவட்டத்தில் உட்பட்டிருக்கக்கூடிய தொழில் முனைவோர்கள், என்னை சந்தித்து பேசினார்கள்.''
காட்சி அரங்கம்
''கிட்டதட்ட ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அவர்களோடு நான் கலந்து பேசினேன். அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அந்த அடிப்படையில், சில அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன். இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப்பொருட்களை வாங்க பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்தப் பொருட்களை காட்சிப்படுத்தத் தேவையான காட்சி அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளதாக சொன்னார்கள்.''
பரிசோதனை நிலையம்
''இதனை இந்த அரசு ஏற்று, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் இணைந்து அத்தகைய பெரும் காட்சி அரங்கம் மற்றும் வளாகம் ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே போன்று கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளிப்பொருட்களின் தரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த பரிசோதனைகளை இங்கேயே மேற்கொள்வதற்காக, சர்வதேச தரத்திலான ஜவுளிப்பொருட்கள் பரிசோதனை நிலையம் (Advanced Testing Lab) ஒன்றும் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.''
கரூர் மாவட்டம்
''இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒரு கோரிக்கையை கரூர் மாவட்ட தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்கு நான் வைக்க விரும்புகிறேன். என்னவென்று கேட்டால், நமது மாநிலத்தினுடைய தொழில் துறையில் மிகவும் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக திகழக்கூடிய இந்த கரூர் மாவட்டம். ஜவுளி உற்பத்தித் தொழில், கொசு வலை உற்பத்தி, வாகனங்களுக்கு கூண்டுகள் கட்டுதல், முருங்கை ஏற்றுமதி போன்ற பல்வேறு துறைகளில் நம்முடைய மாநிலத்தில் முதன்மை மாவட்டமாக இந்த மாவட்டம் விளங்குகிறது.''
நீங்கள் செய்வீர்களா?
''இந்தத் தொழில் வளர்ச்சியில் கரூர் மாவட்டம் மேலும், மேலும் உயர்ந்து ஏற்றுமதியில் சிறந்து இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் திருப்பூர் மாவட்டத்திற்கிணையாக வளர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என்னுடைய கோரிக்கை. அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்களா? உங்களை தான் கேட்கிறேன், நீங்கள் நிறைவேற்றத் தயாராய் இருக்கிறீர்களா? எனவே அப்படிப்பட்ட உணர்வோடு நான் சொல்ல விரும்புவது மாவட்டங்களுக்குள் இத்தகைய ஆரோக்கியமான தொழில் போட்டிகள் இருக்கத்தான் வேண்டும்.''
''ஏன் என்று கேட்டீர்கள் என்றால், மாவட்டங்கள் வளர, மாநிலம் வளரும், அந்த வளர்ச்சிக்கு எந்நாளும் உதவக்கூடிய கலங்கரை விளக்காக திராவிட மாடல் ஆட்சி திகழும், திகழும் என்பதை இந்தக் கரூரில் வீரமாக நான் சூளுரைத்து விடைபெறுகிறேன்.'