'பயப்படாதீங்க ஒன்னும் ஆகாது..' வீட்டுக்கே வந்து விளக்கிய ஆட்சியர்.. கரூரில் ஜோராக நடந்த வேக்சின் பணி
கரூர்: கரூர் மாவட்டத்தில் பொதுமக்களில் யார் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம் தடுப்பூசி குறித்த நன்மைகளை விளக்கி வேக்சின் போட்டுக் கொள்ளச் சம்மதிக்கவும் வைத்தார். ஆட்சியரின் இந்த செயலுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தற்போதைய சூழலில் கொரோனாவை ஒழிக்க கிட்டதட்ட அனைத்து நாடுகளுமே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
உலக நாடுகள் அனைத்தும் வேக்சின் பணிகளையே தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் சில நாடுகள் பூஸ்டர் டோஸ் குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
வேக்சின் பணிகள்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. அதேபோல தடுப்பூசி பற்றாக்குறையும் தீர்ந்துள்ள நிலையில், மின்னல் வேகத்தில் கொரோனா வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாகக் கடந்த செப். 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் அன்று 2.5 கோடி வேக்சின்கள் போடப்பட்டது.
மெகா தடுப்பூசி முகாம்
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தடுப்பூசி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகப்படியானோருக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தும் வகையில் கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதைவிடக் கூடுதலாக 28.91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
3ஆவது மெகா தடுப்பூசி முகாம்
அதேபோல கடந்த செப். 19ஆம் தேதி மாநிலத்தில் 2ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதிலும் இலக்கை காட்டிலும் கூடுதலாக 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்தச் சூழலில் 3ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. வழக்கமான தடுப்பூசி மையங்களுடன் இணைந்து நடமாடும் தடுப்பூசி மையங்களிலும் வேக்சின் பணிகள் நடைபெற்றது.
கரூர் மாவட்டம்
அதன்படி கரூர் மாவட்டத்தில் 619 முகாம்கள், 5 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 624 இடங்களில் கொரோனா வேக்சின்கள் போடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகை 9.3 லட்சமாகும். அதில் 5.72 லட்சம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினும், 1.25 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து கரூரில் வேக்சின் போடாதவர்களும் 2ஆம் டோஸ் போட வேண்டியவர்களும் அதிகளவில் ஆர்வதுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றும் வேக்சின் செலுத்தும் பணிகள் நடைபெற்றன.
ஆட்சியர் ஆய்வு
இருப்பினும், வெகு சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாகப் பொதுமக்கள் வேக்சின் போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டினர். இந்தச் சூழலில் இன்று காலை முதலே கரூரின் பல்வேறு பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலணி பகுதிக்குச் சென்ற ஆட்சியர் பிரபுசங்கர் அங்கு யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்தார். அப்பகுதியில் ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாமல் இருந்தனர். அவர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், வேக்சின் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
Recommended Video
ஒன்னும் ஆகதுங்க
அதேபோல புதுப்பட்டி, தோகைமலை, தளவாபாளையம் என்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்த ஆட்சியர் பிரபுசங்கர், தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்குச் சென்று வேக்சின் நன்மைகள் பொறுமையாக எடுத்துரைத்தார். மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து வேக்சின் குறித்து விளக்கியதால் சிலர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனர். அதேபோல ஆய்வின் போது முதியவர் ஒருவர், தனக்குச் சர்க்கரை நோய் இருப்பதாகவும் அதனால் தான் வேக்சின் போட்டுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
குவியும் பாராட்டு
அப்போது அவரிடம் சர்க்கரை நோய் உள்ளவர்களும் வேக்சின் போட்டுக் கொள்ளாலாம் என்று விளக்கிய ஆட்சியர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். அந்தப் பின்னரே, அவர் வேக்சின் போட்டுக் கொள்ளச் சம்மதித்தார். பொதுமக்களில் சிலருக்கு வேக்சின் பற்றிய தயக்கம் இன்னும் கூட உள்ளது. அதை நீக்க மாவட்ட ஆட்சியரே களத்தில் இறக்கியதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.