30 ஆண்டு கனவு.. வந்தாரு.. போனாரு.. ஐந்து நாளில் நிறைவேறியது.. அசத்திய கரூர் கலெக்டர் பிரபுசங்கர்!
கரூர்: 30 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்த கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் கிராமத்திற்கு ஆய்விற்காக சென்ற கலெக்டர் பிரபு சங்கர், அடுத்த ஐந்து நாளில் பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்து அசத்தி உள்ளார். அரசு நிர்வாகம் இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும் என்று கலெக்டர் முனைந்ததால் 30 ஆண்டு கனவு ஐந்து நாளில் சாத்தியமாகி உள்ளது. உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.
போக்குவரத்து, மின்சாரம், பள்ளி, இந்த மூன்று வசதிகள் இருந்தால் தான் வளர்ச்சி என்பது கிராமங்களை எட்டுவது சாத்தியம். இந்த மூன்றில் மின்சாரம் என்ற ஒன்றை மட்டும் எட்டிவிட்டது அரசு. ஆனால் போக்குவரத்தும் பள்ளியும் இன்னமும் பல ஊர்களில் எட்ட வேண்டி உள்ளது.
குறிப்பாக பேருந்து வசதி என்பது இன்னமும் சில கிராமங்களுக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது. அப்படி ஒரு கிராமம் தான் கரூர் மாவட்டம் கருப்பம்பாளையம் கிராமம்.

பொதுமக்கள் கோரிக்கை
அண்மையில் இந்த கிராமத்திற்கு கலெக்டர் பிரபு சங்கர் ஆய்விற்காக சென்றிருந்த போது அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு உரிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் அவசரத் தேவைக்கு கூட கரூர்சென்று வர முடியவில்லை என்று தெரிவித்தனர்.

கலெக்டர் உத்தரவு
மக்களின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் விஜய் சங்கர், கருப்பம்பாளையம் வரை பஸ் வசதியை ஏற்படுத்திட போக்குவரத்துத்துறை பொது மேலாளருக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் உத்தரவின்படி தினமும் காலை 9.25 மணிக்கு அப்பிபாளையம் முதல் கரூர் வரை உள்ள நடையினை கருப்பம்பாளையம் வரை இயக்கவும் மாலை 6.20 மணிக்கு கரூர் முதல் கருப்பம்பாளையம் வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை கருப்பம் பாளையம் செல்லும் வகையில் டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்தது.

மக்களிடம் பேசினார்
அதன்படி நேற்று (19ம் தேதி) முதல் கருப்பம்பாளையம் டவுன் பஸ் சேவை தொடங்கியது. கலெக்டர் பிரபுசங்கர் அதனை பார்வையிட்டார். பேருந்தில் ஏறி தங்களிடம் பேசிய கலெக்டருக்கு மக்கள், அப்போது நன்றி தெரிவித்தனர். இந்த புகைப்படங்களை கலெக்டர் பிரபு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் கலெக்டர் பிரபு சங்கரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

அரசு நிர்வாகம்
பேருந்து வர வேண்டும் என்பது கரூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தின் 30 ஆண்டு கனவு ஆகும். வருவாய் அடிப்படையில் பார்த்தால் லாபம் இல்லை என்று புறக்கணிக்கப்பட்ட வழித்தடத்தில் மக்கள் நலன் கருதி அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் கலெக்டர் ஆய்வு செய்த ஐந்தே நாளில் கிடைத்துள்ளது. அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டதால் 30 ஆண்டு கனவு ஐந்து நாளில் சாத்தியமாகி உள்ளது. உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்.












Click it and Unblock the Notifications