இந்து கடைகளில் மட்டும் பொருட்களை வாங்குங்க! வெறுப்பு பிரசாரம் செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது
கரூர்: "நமக்கு தேவையான அனைத்து பொருட்களை இந்துக்களின் கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்" என சமூக வலை தளங்களில் பதிவிட்டு மதக்கலவரங்களை தூண்டிய கரூர் இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி வழக்கமாக இதுபோன்ற சர்ச்சையை இந்து முன்னணியினர் ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் இந்த முறை இது போன்று தேவையற்ற கலவரங்களை உருவாக்க முயற்சிப்பவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகாசி தொழிலாளர்கள் “பாவம்”.. தீபாவளி நெருங்குது! டெல்லி முதல்வருக்கு லெட்டர் போட்ட ஸ்டாலின்
வெறுப்பு பிரசாரம்
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் இந்து கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய மற்றும் கிருத்துவ கடைகளை புறக்கணிக்க வேண்டும் எனவும், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போஸ்டர்களை ஒட்டியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவின் மிக பிரமாண்டமான பட்டேல் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், நாட்டின் உயிர் நாடியாக உள்ள பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்கள் கணிசமான அளவில் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம் என்றும் மற்ற அரசியல் அமைப்புகள் எடுத்து சொன்னாலும் இவர்களின் வெறுப்பு பிரசாரங்கள் குறைவதில்லை.
இந்து முன்னணி நிர்வாகி
இவ்வாறு இருக்கையில், கரூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் சக்தி இவர் கடந்த சில தினங்களாக துண்டு பிரசுரம் ஒன்றை வியாபாரிகள் பொதுமக்களிடம் விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. அதில், நலிவுற்ற நிலையிலிருக்கும் இந்து வியாபாரிகளை காப்பாற்ற வரும் தீபாவளி பண்டிகைக்கு பொருட்களை இந்து கடைகளிலேயே வாங்குங்கள் என அந்த நோட்டீசில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த துண்டு பிரசுரத்தை பொதுமக்களை விநியோகம் செய்தது மட்டுமல்லாது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு இருந்தார்.
கைது
இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தியை கைது செய்தனர். சக்தியை கைது செய்யப்பட்டுள்ள குறித்து அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளியணை காவல் நிலையத்தில் கூடினர். அப்போது அவர்கள் காவல் துறைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்
கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சக்தியை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர் அப்பொழுது அங்கு நின்றிருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த வெற்றி என்பவர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் அவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இறக்குமதி விவரம்
கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் சுமார் 58.71 பில்லியன் டாலர் அளவுக்கு அதாவது 47 லட்சம் கோடி ரூபாய் அளவில் பொருட்களை சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது. இது கடந்த 2021ம் ஆண்டில் 87.54 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தி மதிப்பில் 72 லட்சம் கோடி ரூபாய். மின்னணு & தொலைத்தொடர்பு தயாரிப்புகள், வாகனங்களின் உதிரி பாகங்கள், அணு இயந்திரங்கள், மருத்துவ கருவிகள் ஆகியவை இந்தியா சீனாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. அவ்வளவு ஏன் உரங்கள் கூட நாம் சீனாவிலிருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம்.
அரபு நாடுகள்
அதேபோல அரபு நாடுகளிலிருந்து கடந்த 2020-2021ம் ஆண்டில் சுமார் 110.73 பில்லியன் டாலர் அளவுக்கு நாம் பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறோம். ஆக இந்த பொருட்களை எல்லோரும்தான் விற்பனை செய்கிறார்கள். இந்துக்கள் இஸ்லாமியர்கள் என்கிற பாகுபாடு கிடையாது. பொருட்களே நம்முடையது கிடையாது. இவ்வாறு இருக்கையில் எந்த கடையில் வாங்கினால் என்ன? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.