எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை.. லெட்டர் ஹெட்டை தவிர்த்து..வாட்ஸ் ஆப்பில் கரூர் பள்ளி அறிக்கை?
கரூர்: கரூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை சம்பவத்தில் எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் வாட்ஸ் ஆப்பில் மற்ற மாணவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. லெட்டர் பேடில் கூட அந்த கடிதம் எழுதப்படாதது அந்த பள்ளியினுடையதுதானா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவர் கடந்த 19-ஆம் தேதி பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை கடிதம்
இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து மாணவி டைரியில் எழுதியிருந்த தற்கொலை கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக மாணவி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபர் யார் என்று சொல்வதற்குக் கூட தனக்கு பயமாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாலியல் தொல்லை
இந்த நிலையில் மாணவியின் தாயார் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், தனது மகளின் சாவுக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். வேதியியல் ஆசிரியர்தான் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது வகுப்பு என்றால் என் மகளுக்கு பிடிக்காது, வீட்டுக்கு வந்தவுடன் அந்த புத்தகத்தை கிழித்து போடுவார் என தெரிவித்திருந்தார்.

பள்ளியில் கொடுமை
இதே போல் பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி என இருக்கும் எங்கள் வீட்டு குழந்தைக்கு பாலியல் தொல்லைகள் பள்ளியில்தானே நடந்திருக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி பயின்ற தனியார் பள்ளி சார்பில் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளி நிர்வாகம் வேதனை
அதில் அன்புள்ள பெற்றோர், மாணவ செல்வங்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். நமது பரணி பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு நம்மையெல்லாம் சொல்லொணா துயரத்திற்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.

பள்ளி
இந்த நிகழ்வில் ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என்பதை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும் காவல் துறை உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க பல்வேறு கோணங்களில் தன்னுடைய விசாரணையை செய்து கொண்டிருக்கிறது.

தண்டனை
விசாரணைக்கு பிறகு கண்டுபிடிக்கப்படும் உண்மையான குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நமது பள்ளி மிக உறுதியாக உள்ளது. இந்த கடினமான சூழலில் பெற்றோர்களும் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பலரும் பலவிதமாக சொல்லும் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நன்றிகள்
விசாரணை முடிவில் உண்மை குற்றவாளியை நாம் அனைவரும் சேர்ந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். மிகக் கடினமான சூழ்நிலையில் பள்ளிக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. இப்படிக்கு பரணி பார்க் பள்ளி நிர்வாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தங்களுக்கோ பள்ளி நிர்வாகத்திற்கோ சம்பந்தமில்லை என்பதை அந்தப் பள்ளியின் லெட்டர் பேடில் தெரிவிக்காமல் இருப்பது அந்த பள்ளிதானா என்ற சந்கேதத்தையும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications