கடைசி வரை சீட் தரவில்லை.. ஏமாற்றிவிட்டார்கள்.. அமமுகவிற்கு தாவும் அதிமுக பெண் எம்எல்ஏ?
கரூர்: சீட் மறுக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் அதிமுகவில் பெண் எம்எல்ஏ கீதா, அமமுகவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே அமமுக உள்ளிட்ட கட்சிகளில் சேர்வது குறித்து தனது ஆதரவார்களுடன் கலந்து பேசி இரண்டு நாளில் முடிவை அறிவிப்பேன் என்று எம்எல்ஏ கீதா கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில் ஏற்கனவே சிட்டிங் எம்எல்ஏ 48 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதில் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
திருச்சி மண்டலம்
திருச்சி மண்டலத்தில் மொத்தம் உள்ள 22 அதிமுக எம்எல்ஏக்களில் 8 பேருக்கு மட்டும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான எஸ்.வளர்மதிக்கும், மண்ணச்சநல்லூர் தொகுதியின் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கும் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
ரத்னசபாபதி எம்எல்ஏ
இதேபோல் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ண ராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி எம்எல்ஏ ம.கோவிந்தராசு ஆகியோருக்கு தற்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ.ஏ.ரத்தின சபாபதிக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
வேறுகட்சிக்கு தாவுகிறார்?
இந்நிலையில் . கிருஷ்ண ராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, தனக்கு சீட் கிடைக்காதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார். வேறுகட்சிக்கு போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கீதா, நான் 1995லிருந்து அதிமுக உறுப்பினராக உள்ளேன். 2011 முதல் 2016 வரை மாவட்ட ஊராட்சிகுழு தலைவராக இருந்தேன். அதன்பிறகு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்தேன்.
அமமுகவில் சேருகிறாரா?
இந்த தேர்தலிலும் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தேன். ஆனால் கடைசி வரை எனக்கு சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். என் கணவர் மீது குற்றம் சுமத்தி எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இது போல் சீட் மறுக்கப்பட்டவர்கள் அனைவரின் சார்பாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன். பல்வேறு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. நான் அமமுகவில் சேருவது பற்றி ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி இரண்டே நாளில் முடிவை அறிவிப்பேன்' இவ்வாறு கூறினார்.