தேசியக் கொடி இயக்கம் என்பது ஏமாற்று வேலை.. மக்களை திசைதிருப்பும் அரசியல்.. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி!
கரூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி இயக்கம் என்பது பாஜகவின் ஏமாற்று வேலை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்து அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார்.
தேசிய கொடியில் மோடி காசு பார்க்கிறார்: ஜோதிமணி! தமிழக காங்கிரசிலிருந்து தொடர்ந்து சீறும் ஒற்றை குரல்
நடைபயணம் எதற்கு?
அப்போது கரூர் மாவட்ட மார்க்கெட் பகுதியில் உள்ள மக்களவை சந்தித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகையில், பாஜகவின் கொடுங்கோன்மை ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைக்க நடைபயணம் தொடங்கியுள்ளோம். இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி செப்.7ம் தேதி பாத யாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.
விலைவாசி உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் வரை அனைத்து பொருட்களின் விலையும் பாஜக அரசு உயர்த்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் சாதாரண பொருட்களை கூட வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது.
பிடிஆர் விவகாரம்
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீதான பாஜக தாக்குதல் அருவருக்கத்தக்கது. களத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி பாஜக இதுவரை இந்தியாவில் நாகரீக அரசியலை செய்ததில்லை. பாஜகவின் ஆபாசமான அரசியலை தமிழக அரசு நிச்சயம் ஒடுக்கும். பாஜகவின் அரசியலுக்கு தமிழக மண்ணில் இடமில்லை என்று தெரிவித்தார்.
Recommended Video
தேசியக் கொடி இயக்கம்
தொடர்ந்து வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி குறித்து பேசிய ஜோதிமணி, ரூ.20 கொடுத்து தேசியக் கொடி வாங்க வேண்டும் என்று மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வெறும் ரூ.8க்கு தயாரிக்கும் தேசியக் கொடியை, எதற்காக ரூ.20க்கு விற்பனை செய்ய வேண்டும். தேசிய பக்தி என்பது விற்பனைக்கானது அல்ல. தேசியக் கொடிக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு உணர்வு எப்போதும் இருக்கும். அது பிரதமர் நரேந்திர மோடியால் வருவது அல்ல.
2002 வரை ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. தேசியக் கொடி இயக்கம் என்பது ஒரு ஏமாற்று வேலை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி மக்களின் கவனத்தை திசைதிருப்பவே வேலை தான் தேசியக் கொடி இயக்கம். இது ஒரு போலி அரசியல், போலி தேசியவாதம் என்று குற்றம்சாட்டினார்.