ரூ.100 கோடி நிலமோசடி.. எம்.ஆர். கரூரில் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெயிடு.. இறுகுகிறது பிடி
கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரை தேடும் பணி தீவிரமாகி உள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்து வருகிறது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் போலீஸ் மற்றும் எஸ்பி அலுவலத்தில் புகார் தரப்பட்டது.

சிபிசிஐடி: இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்..
தள்ளுபடி: இன்றைய தினம் இதற்கான உத்தரவை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பிக்கப் போகிறது. ஏற்கனவே முன் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், இப்போது இடைக்கால முன் ஜாமீன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் இன்றைய தினம் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீனும் மறுக்கப்பட்டதால் தலைமறைவாகிவிட்டார் எம்.ஆர். விஜயபாஸ்கர்... எனவே, தலைமறைவாக விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவரைத் தேடி வருகிறார்கள்.
ரெய்டுகள்: இப்படிப்பட்ட சூழலில், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.. நிலமோசடி தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ள நிலையில், விஜயபாஸ்கர் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை முதலே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
கரூர் தாளப்பட்டியில் யுவராஜ் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.. வேலாயுதம் பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நில மோசடி: 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக யுவராஜ், செல்வராஜ், ரகு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நில மோசடி வழக்கில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உட்பட 13 பேர் தீவிரமாக தேடப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு ரெய்டு நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, எம்ஆர் விஜயகாஸ்கரின் முன்ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில், கரூரில் சிபிசிஐடி போலீசார் நடத்தி வரும் இந்த ரெய்டுகள், கூடுதல் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications