அடடே இதுதாங்க தமிழ்நாடு.. ஓசூரில் உலா வந்த மதநல்லிணக்க விநாயகர்! ஒன்றாக வந்த இந்து - முஸ்லிம்கள்!
கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெற்ற மத நல்லிணக்க விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில், இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில், 2 வருடங்களுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி விழா, கடந்த புதன்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பல இடங்களில் வேல் விநாயகர், கலச விநாயகர், பூந்தி விநாயகர் என வித்தியாசமாக செய்யப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்து அமைப்புகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, பாகலூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் அருகே உள்ள பேரிகையில், 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.

மத நல்லிணக்க ஊர்வலம்
இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் வகையில், மத நல்லிணக்க ஊர்வலமாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அப்போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாராட்டு
இதையடுத்து விநாயகர் சிலைகள் அனைத்தும் மடிவாளம் ஏரியில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்ச்சியையொட்டி, ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலம், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.












Click it and Unblock the Notifications