ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி..ஒரு செய்தியாளரை கைதுசெய்ய.. விமானத்தையே கடத்திய பெலாரஸ்..என்ன நடந்தது
லண்டன்: செய்தியாளர் ஒருவரைக் கைது செய்ய நடுவானில் பறந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த பயணிகள் விமானத்தையே பெலாரஸ் அரசு போர் விமானத்தை கொண்டு வழிமறித்து, தரையிறக்கிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டில் கடந்த 27 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ அதிபராக உள்ளார். அவர் தேர்தல்களில் முறைகேடுகளைச் செய்தே வெற்றி பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.
இதன் காரணமாக அலெக்சாண்டர் லுகாசெங்கோவுக்கு எதிராக பெலாரஸில் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதையடுத்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அவர் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
செய்தியாளர் ரோமன் புரோட்டசெவிச் கைது... அமெரிக்கா கண்டனம்...பெலாரஸ் மீது ஐரோப்பிய யூனியன் புதிய தடை
ஐரோப்பியாவின் கடைசி சர்வாதிகாரி
ஐரோப்பியாவின் கடைசி சர்வாதிகாரியாக அறியப்படும் அலெக்சாண்டர் லுகாசெங்கோவுக்கு எதிராகப் பத்திரிக்கையாளர்கள் சிலரும் வலுவான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக பெலாரஸ் நாட்டின் ரோமன் புரோடாசெவிச் என்ற செய்தியாளர், அதிபர் லூகாசெங்கோவு பற்றியும் அவரது ஊழல் பற்றியும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறார். அதிபர் லுகாசெங்கோவுவின் அடக்குமுறைகள் அதிகரித்ததால், பத்திரிக்கையாளர் புரோடாசெவிச் லிதுவேனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
பத்திரிக்கையாளர் புரோடாசெவிச்
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன், பத்திரிக்கையாளர் புரோடாசெவிச் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கிரீஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அவர் லிதுவேனியா திரும்ப ரயான் ஏர் விமானத்தில் ஏறியுள்ளார். விமானம் வழக்கம் போல கிரீஸ் நாட்டிலிருந்து கிளம்பியுள்ளது.
விமான கடத்தல்
அந்த விமானம் பெலாரஸ் வான்வழி மண்டலம் வழியாகப் பறந்து கொண்டிருந்த போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. என்ன நடக்கிறது என்று பைலெட்கள் உணரும் முன், பெலராஸ் நாட்டின் மிக் 29 போர் விமானம் ஒன்று அந்த ரயான்ஏர் பயணிகள் விமானத்தை வழிமறித்து, பெலராஸில் உள்ள மின்ஸ்க் விமான நிலையத்தில் தரையிறக்கியது.
பத்திரிக்கையாளர் கைது
விமானம் பெலாரஸ் நாட்டில் தரையிறங்கச் சென்றபோதே பத்திரிக்கையாளர் புரோடாசெவிச் லிதுவேனியா, தன்னை கைது செய்யவே இது நடத்தப்படுகிறது என்று புரிந்து கொண்டார். உடனடியாக தனது பேக்கில் இருந்த லேப்டாப் மற்றும் பென் டிரைவர்களை, தன்னுடன் வந்த காதலியிடம் கொடுத்துள்ளார். இருப்பினும், விமானம் தரையிறங்கியதும், பத்திரிக்கையாளருடன் இணைந்து அவரது காதலியும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நாடுகள் கண்டனம்
இந்நிலையில், பெலாரஸ் அரசின் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்ட விமான கடத்தல் என்றே உலகின் பல்வேறு நாடுகளும் விமர்சித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் பெலாரஸ் நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ளது. அதேபோல பெலாரஸ் நாட்டின் இந்த நடவடிக்கைகளுக்குக் கண்டம் தெரிவித்துள்ள அமெரிக்காவும் புதிய தடைகளை அறிவித்துள்ளன.
உடல்நிலை பாதிப்பு
கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் புரோடாசெவிச் லிதுவேனியாவின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை பெலாரஸ் உள் துறை அமைச்சர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்நிலையில், பத்திரிக்கையாளர் புரோடாசெவிச் லிதுவேனியாவின் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
வீடியோ வெளியீடு
அதில் அவர், "நான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளேன். போலீசார் என்னைச் சட்டத்துக்கு உட்பட்டே நடத்துகின்றனர். எனது உடல்நிலை நன்றாகவே உள்ளது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறும் இந்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பை அளிப்பேன். பெலாரஸ் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களை ஒருங்கிணைத்ததை நான் ஒப்புக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தம்
அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. மேலும் பத்திரிக்கையாளர் புரோடாசெவிச் லிதுவேனியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற சர்வதேச அழுத்தமும் பெலராஸ் நாட்டிற்கு அதிகரித்து வருகிறது.