இளவரசி உயிரோடு இருக்காரா?.. ஆதாரம் காட்டுங்க.. அமீரகத்தை நெருக்கும் பிரிட்டன்
லண்டன்: ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசி ஷேகா லதிபா உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து ஆதாரம் காட்ட வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தவும் (Mohammed bin Rashid Al Maktoum) மகளும் இளவரசியுமான ஷேகா லதிபா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் சிறை வைக்கப்பட்டிருக்கும் வில்லாவின் கழிவறையில் இருந்து, அவரே பேசிய வீடியோக்களை பிபிசி தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.
அதில், "நான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன், இந்த வில்லாவை சிறையாக மாற்றியுள்ளனர். அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு ஜன்னலைக் கூட என்னால் திறக்க முடியவில்லை. நாளுக்கு நாள் என் நிலைமை மோசமடைந்து வருகிறது." என பேசியுள்ளார்.
ஏன் வீட்டுச் சிறை?
இளவரசி ஷேகா லதிபா, கடந்த 2018ல் தனது நண்பரும் உளவு அமைப்பைச் சேர்ந்தவருமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Tiina Jauhiainen உடன் அமீரக எல்லையை காரில் கடந்து ஓமனுக்கு சென்றுள்ளார். பின் கடல் மார்க்கமாக படகில் இருவரும் தப்பிச் சென்ற போது, கோவா அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர் அமீரக இளவரசி என்று தெரிந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
7 காவலர்கள்
இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசியுள்ள லதிபா, தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாடு கடத்தப்பட்டவுடன் Al-Awir மத்திய சிறையில் 3 மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னரே வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உள்ளே 2 காவலர்களும், வெளியே 5 காவலர்களும் என எப்போதும் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லதிபாவுக்கு என்னாச்சு?
இந்த வீடியோக்கள் ஒராண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கலாம் என பிபிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த வீடியோக்களை இந்திய எல்லையில் கைது செய்யப்பட்ட லதிபாவின் நண்பர் Tiina Jauhiainen அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சமீப காலமாக லதிபாவிடம் இருந்து வீடியோக்கள் வருவதில்லை அவருக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை என அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் கேள்வி
இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் அளித்துள்ள பேட்டியில், பிபிசி வெளியிட்டுள்ள வீடியோ குறித்து நாங்கள் கவலை அடைகிறோம். ஷேகா லதிபா உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து ஏதாவது ஒரு ஆதாரத்தை அமீரகம் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இளவரசி தொடர்பான சிறைவாச வீடியோக்கள் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அரசு வாய்த் திறக்கவில்லை.