10 முறை இந்தியா வருகை தந்த புதிய மன்னர் சார்லஸ்- மும்பையில் 71-வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்!
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமான நிலையில் அந்நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார். புதிய மன்னர் சார்லஸ் 10 முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் தமது 71-வது பிறந்த நாளை 3 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் கொண்டாடி மகிழ்ந்தார்.
உலகில் மிக நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்தவர் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத். 96-வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக எலிசபெத் மகாராணி நேற்று காலமானார்.

எலிசபெத் ராணி மறைவைத் தொடர்ந்து வேல்ஸின் முன்னாள் இளவரசர் சார்லஸ் அரியணை ஏறுகிறார். பிரிட்டனின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பல்வேறு சம்பிரதாயங்களின் படி பதவியேற்க உள்ளார்.

மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் 1961,1983, 1997-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்தார். சென்னையில் மகன் ஆண்ட்ரூஸின் முதல் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் இதில் பங்கேற்றார். 1997-ல் பிரிட்டனை எதிர்த்து போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர் மருதநாயகம் வாழ்க்கையை விவரிக்கும் நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்பட தொடக்க விழாவில் எலிசபெத் மகாராணி பங்கேற்றார். முதல்வராக இருந்த கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தற்போது புதிய மன்னராகும் மூன்றாம் சார்லஸ், இந்தியாவுக்கு 10 முறை வருகை தந்துள்ளார். உலகில் நீண்டகாலம் இளவரசராக இருந்தவர் சார்லஸ். தற்போது மன்னராக பொறுப்பேற்க உள்ளதால் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுகிறார்.

மூன்றாம் சார்லஸ், 1975, 1980, 1991, 1992, 2002, 2006, 2010, 2013,2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு சார்லஸ் வருகை தந்துள்ளார். 2019-ம் ஆண்டு இந்தியா வருகை தந்த சார்லஸ் தமது 71-வது பிறந்த நாளை மும்பையில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.












Click it and Unblock the Notifications