முழுவதுமாக 24 மணி நேரம்.. கொரோனாவால் ஒருவரையும் இழக்காத பிரிட்டன்.. சாதித்துக் காட்டியது எப்படி
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை ஜூன் 1ஆம் தேதி முழுமையாக 24 மணி நேரத்திற்கு ஒரு நபர்கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை.
கொரோனாவின் கோரதாண்டவம் உலகின் பல நாடுகளிலும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா பரவல் தீவிரமடைவதற்கு முன்னரே தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகள் வைரஸ் பாதிப்பு குறைக்கின்றன. பல நாடுகளும் கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை என்றாலும்கூட சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றன.
குறையும் கொரோனா
முதல் அலையிலேயே கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் இருந்தது. அதன் பிறகு மெல்லப் பாதிப்புகள் குறைந்து வந்த போது, புதிய உருமாறிய கொரோனா ஒன்று பிரிட்டனில் கண்டறியப்பட்டது. இது வைரஸ் பரவலை மிக மோசமான ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றது. இதையடுத்து மீண்டும் அங்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
லாக்டவுன்
அங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரடியாகவே ஈடுபட்டுள்ளார். இதற்காகச் சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸையும் அமைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் விதிகள் அங்கு மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பலன்களைத் தான் பிரிட்டன் தற்போது அனுபவித்து வருகிறது.
உயிரிழப்பு இல்லை
கொரோனா பரவல் தொடங்கியது முதல் பிரிட்டன் நாட்டில் 1.27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், பிரிட்டன் நாட்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி, ஒரு கொரோனா உயிரிழப்புகூட பதிவாகவில்லை. இது பிரிட்டன் நாட்டில் மாபெரும் சாதனை. கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு என்ற நிலையிலிருந்து கொரோனா உயிரிழப்புகள் இல்லாத நாடு என்ற நிலையைப் பிரிட்டன் குறுகிய காலத்தில் அடைந்துள்ளது.
மாட் ஹான்காக்
இது குறித்து பிரிட்டன் சுகாதாரத் துறைச் செயலர் மாட் ஹான்காக் கூறுகையில், "இது நமக்கு மிக முக்கியமான ஒரு மைல்கல்.சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நல்ல செய்தி. ஆனால், அதேநேரம் நாம் கொரோனா வைரசை இன்னும் முழுமையாக வெற்றி கொள்ளவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய தடுப்பூசி பணிகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது" என்றார்.
தடுப்பூசி பணிகள்
உலகிலேயே தடுப்பூசி பணிகளை வெகு சீக்கிரமாகத் தொடங்கிய நாடுகளில் ஒன்று பிரிட்டன். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் தடுப்பூசி பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கு பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராஜெனகா, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உணர்த்துவது என்ன
ஒரு நாள் முழுவதும் கொரோனாவில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது நம்பிக்கை அளிக்கும் ஒரு செய்தியாகவே உள்ளது. முறையான ஊரடங்கு, சரியான தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை மூலம் கொரோனா கட்டுப்படுத்த முடியும் என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் உலகின் மாபெரும் தொற்றாக உருமாறியுள்ள கொரோனா, இன்னும் நம்மைவிட்டு முழுமையாக அகலவில்லை என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.
உருமாறிய கொரோனா
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் பல வாரங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா பாதிப்பு பிரிட்டன் நாட்டில் தற்போது தீவிரமாகப் பரவ தொடங்கியுள்ளதால், 3ஆவது அலை ஏற்படும் அபாயமும் உள்ளதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.