“முஸ்லிம் பெண்களை கடத்தி பலாத்காரம்” உபி சாமியாரின் பகீர் பேச்சு வீடியோ! கைதட்டி ஆர்ப்பரித்த கும்பல்
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் காருக்குள் அமர்ந்தபடி பேசிய சாமியார் ஒருவர், சீத்தாபூர் பகுதியில் உள்ள எந்த ஒரு பெண்ணையும் இஸ்லாமியர் துன்புறுத்தினால், முஸ்லிம் பெண்களை கடத்தி, பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என பேசிய பகீர் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாக பதவியில் அமர்ந்துள்ள நிலையில், சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் ஹிஜாப் விவகாரம், கடைகளில் ஹலால் இறைச்சி மற்றும் மசூதிகளில் ஒலிப் பெருக்கிக் தடை என வலதுசாரி அமைப்புகள் அடுத்தடுத்து கிளப்பி வரும் நிலையில், தற்போது உபியில் சாமியார் ஒருவர் பேசிய வீடியோ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் அதிர்ச்சி
உத்திர பிரதேசத்தில் வலதுசாரி அமைப்பினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் பேசிய சாமியார் ஒருவர், இஸ்லாமிய பெண்களுக்கு பொது வெளியில் பாலியல் பாலாத்கார மிரட்டல் விடுத்துள்ள நிலையில், சீதாபூர் வெறுப்பு பேச்சு தொடர்பாக ஒரு மூத்த அதிகாரி விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு மிரட்டல்
உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்தில் உரையாற்றிய சாமியார் ஒருவர் முஸ்லிம் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படும் வீடியோ குறித்து போலீஸார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பலாத்காரம் செய்வேன்
காவி உடை அணிந்த ஒரு நபர், கைராபாத் என்ற சிறிய நகரத்தில் ஜீப்பிற்குள் இருந்து கூட்டத்தில் உரையாற்றும் நிலையில், போலீஸ் சீருடையில் ஒருவரும் அருகில் உள்ளார். ஜீப்பில் அமர்ந்தபடி ஒலிப்பெருக்கியில் பேசுகையில், அந்த நபர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கத்தோடு வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களைச் பேசுகிறார். அதில், " தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாகவும்,, இதற்காக ₹ 28 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற அவர், அந்த பகுதியில் உள்ள எந்த ஒரு பெண்ணையும் ஒரு இஸ்லாமியர் துன்புறுத்தினால், முஸ்லிம் பெண்களை கடத்தி, பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன் என்று கூறுகிறார்.

நடவடிக்கை எடுக்க கோரிகை
இந்த பேச்சினை அங்கிருந்த கூட்டத்தினர் பலத்த ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்ற நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான AltNews இன் இணை நிறுவனர் முகமது ஜுபைர், வீடியோ ஏப்ரல் 2ஆம் தேதி அன்று படமாக்கப்பட்டது, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகும் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த சீதாபூர் காவல்துறை, ஒரு மூத்த அதிகாரி இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். ஜுபைரின் வீடியோ பதிவைத் தொடர்ந்து, பல ட்விட்டர் பயனர்கள் அந்த சாமியாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications