‛இந்துத்துவா, என்கவுண்ட்டர், சீக்ரெட் பிளானிங்’.. உ.பி பாஜக தட்டி தூக்கியது எப்படி? 5 ரகசியங்கள்!
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ‛‛என்கவுண்ட்டர், இந்துத்துவா, எதிர்க்கட்சிகளின் வீழ்ச்சி'' உள்பட 5 முக்கிய காரணங்கள் தான் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மார்ச் 7 ல் இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
இந்த கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக மீண்டும் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டன. இதை எதிரொலிக்கும் வகையில் தான் நேற்றைய தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.
Exclusive: எனது தலையாய பணி இது தான்! நிறைய கற்று வருகிறேன்! விவரிக்கும் சென்னை மேயர் ப்ரியா ராஜன்!
பாஜக அமோக வெற்றி
பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதன்மூலம் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று பிரதான எதிர்கட்சியாக மாறியுள்ளது. இவர்கள் தவிர ஏடிஏஎல் 12, ஆர்எல்டி 8, நிசாத், எஸ்பிஎஸ்பி தலா 6, காங்கிரஸ் 2,மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன. ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் முதல்வர்களை கொண்டிருந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. மக்கள் மத்தியில் இரு கட்சியிலும் செல்வாக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முக்கிய 5 காரணங்கள்
இந்நிலையில் தான் உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மாநிலம் மோசமான நிலைமைக்கு சென்றதாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் குற்றம்சாட்டின. அதாவது மாநிலத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தாதது, வேலையிழப்பு அதிகரித்தது, கொரோனாவை கட்டுப்படுத்த தவறியது, பலாத்காரம், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்ததாக அவர்கள் கூறினர். இதுதவிர அரசு கட்டடங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் பாஜக மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஆனால் இது எதுவும் தேர்தலில் எடுபடவில்லை. பாஜக 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய 5 காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் காரணம்
உத்தர பிரதேச மாநிலத்தில் உரிமைகள் மறுக்கப்படுவதாக பல விமர்சனங்கள் எழுந்தாலும் கூட மாபியா, கிரிமினல் குற்றவாளிகள் மீதான என்கவுண்ட்டர் நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொண்டார். மேலும் தேர்தல் பேரணி, பொதுக்கூட்டங்களிலும் மாநிலத்தில் கொலை, பலாத்கார வழக்குகள் குறைந்துள்ளதை புள்ளி விபரங்களோடு யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தெரிவித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். இது மக்களிடம் வரவேற்பை பெற்றது.
நலத்திட்டங்கள்
கொரோனாவால் உயிர்பலி, வேலையிழப்பு ஏற்பட்ட காலக்கட்டத்தில் பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருந்தன. அப்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலவச ரேஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஏழை மக்களிடம் பாஜகவுக்கு நற்பெயரை வாங்கி கொடுத்தது. இதுதவிர பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்கள் பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்துத்துவா கொள்கை
உத்தர பிரதேசத்தில் பாஜக இந்துத்துவா கொள்கையை பிரதானமாக முன்னெடுத்தது. அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது முதல் காசி வழித்தடம் திறப்பு வரையிலான பல்வேறு திட்டங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்துத்துவா கொள்கையை எங்கும் பாஜக விட்டுக் கொடுக்கவில்லை. யோகி ஆதித்யநாத் தனது பேரணி, பொதுக்கூட்டங்களில் ‛‛80 vs 20'' மற்றும் ‛‛அலி vs பஜ்ரங்பாலி'' என கூறியது இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவுக்கு உதவியது.
தேர்தலுக்கு தயாரான விதம்
உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முன்பே தேர்தல் பணிகளை பாஜக துவக்கியது. இதில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் எதிர்க்கட்சியினர் பிரசாரம் துவங்குவதற்கு முன்பே அதாவது கொரோனா ஊரடங்கு காலத்திலேயே வீடு வீடாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட துவங்கியது. மேலும் தேர்தலுக்கு முந்தைய 6 மாதங்களில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் கிராமங்கள் தோறும் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்ததோடு, பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். அத்துடன் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் பாஜக சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. பட்டியல் இனத்தவர்கள், ஓபிசி மக்களை அணுக தனித்தனி பிரதிநிதிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. தேர்தல் பணிகளை கண்காணிக்க தேசிய தலைவர்கள் அடங்கிய மூன்றடுக்கு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் மாநிலத்தில் தேர்தல் பணி தொய்வின்றி, விறுவிறுப்பாக நடந்தது. இது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்களாக மாறியுள்ளன.
எதிர்க்கட்சிகள் வீழ்ச்சி
2017 சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் முன்னேற்றம் பெற்றுள்ளது. கடந்த முறை 47 இடங்களில் வென்ற இந்த கட்சி தற்போது 111 இடங்களில், கூட்டணி கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இது சமாஜ்வாதி கட்சிக்கு வளர்ச்சியாக பார்க்கும் சூழலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில் முறையே 2, ஒன்று என மொத்தம் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இது காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு கடும் வீழ்ச்சியாகும். அத்துடன் உத்தர பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் தேய்ந்து கட்டெறும்பாக மாறுவது பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேலும் அதிகார ஆசையில் எதிர்க்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இவர்கள் பிரிக்கும் ஓட்டுக்கள் பாஜகவுக்கு சாதகமாக அமைகிறது. இந்த 5 காரணங்கள் தான் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.