பெண்ணின் தலையில் எச்சில் துப்பிய சிகை அலங்கார நிபுணர்.. கைது செய்யணும்.. இந்து அமைப்பினர் போர்க்கொடி
லக்னோ: புகழ்பெற்ற பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப். இவர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிகை அலங்கார நிலையங்களை நடத்தி வருகிறார். இந்த ஆடம்பர சிகை அலங்கார நிலையங்களுக்கு பிரபலங்கள், பணக்காரர்கள் என்று வாடிக்கையாளர் பட்டியல் அதிகம்.
Recommended Video
சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப் அவ்வப்போது பொதுமக்கள் மத்தியில் சிகை அலங்கார பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் கடந்த 3-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஏராளமான மக்கள் கூடியிருக்க அவர்கள் முன்னிலையில் சிகை அலங்கார பயிற்சி வகுப்பு நடத்தினார்.

பெண்ணின் தலையில் எச்சில் துப்பினார்
பூஜா குப்தா என்ற பெண்ணின் தலையில் அவர் சிகை அலங்காரம் செய்து காட்டினார். இந்த சிகை அலங்கார முறை குறித்து மக்களிடமும் நேரடியாக விளக்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் '' சிகை அலங்காரத்தின்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் எச்சிலை பயன்படுத்தி கொள்ளலாம்'' என்று கூறியபடி அந்த பெண்ணின் தலையில் எச்சில் துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூகவலைத்தளங்களில் வீடியோ பரவல்
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து பூஜா குப்தா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி அழகு நிலையம் வைத்திருக்கும் பூஜா குப்தா கூறுகையில், 'ஜாவித் ஹபீப்பின் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். முடி வெட்டுவதற்காக என்னை மேடைக்கு அழைத்தார். தண்ணீர் இல்லை என்றால் எச்சிலை உபயோகிக்கலாம் என்றார். இனிமேல் தெருவோர முடிதிருத்தும் நபரிடம் முடி வெட்டப் போகிறேன். ஆனால் 'ஜாவித் ஹபீப்பிடம் செல்லமாட்டேன்'' என்று கூறினார்.

தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச காவல்துறையை தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக எடுத்த விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜாவித் ஹபீப்பின் இந்த செயலுக்காக அவருக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

மன்னிப்பு கேட்டார்
இந்த நிலையில் ஜாவித் ஹபீப் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். ''நீண்ட பயிற்சி வகுப்பு அலுப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை நகைச்சுவை ஆக்குவதற்காகத்தான் அவ்வாறு செய்தேன். நீங்கள் உண்மையிலேயே புண்பட்டிருந்தால் , நான் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து என்னை மன்னியுங்கள்' என்று கூறியுள்ளார்.ஜாவித் ஹபீப் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தொற்றுநோய்கள் சட்டம், நபரை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது கிரிமினல் சக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்து அமைப்பினர் போர்க்கொடி
இந்த நிலையில் ஜாவத் ஹபிப்புக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஜாவத் ஹபிப் இந்திய கலாசாரத்தை புண்படுத்தி விட்டார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர் இந்தியாவில் சிகை அலங்கார நிலையங்களை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் போராட்டமும் நடத்தினார்கள்












Click it and Unblock the Notifications