ஒற்றுமை! சிறையில் முஸ்லிம்களோடு நோன்பிருக்கும் இந்துக்கள்! உபியில் தொடரும் 50 ஆண்டு பாரம்பரியம்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபாங்கி சிறையில் முஸ்லிம்களோடு சேர்ந்து இந்துக்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இந்த பாரம்பரியம் கடந்த 50 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முஸ்லிம்களின் புனித மாதம் ரமலான். இந்த மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். தற்போது முஸ்லிம்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். அடுத்த மாதமான மே 3ல் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் தான் தற்போதைய சூழலில் நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. சில இடங்களில் மதரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து இருதரப்பு இடையே மோதலை ஏற்படுத்துகின்றனர்.
40 நாளில் 90 பேர் மதமாற்றம்... உத்தர பிரதேசத்தில் 55 பேர் மீது வழக்கு... 26 பேர் கைது
15 இந்துக்கள் கைகோர்ப்பு
இவர்களுடன் சேர்ந்து 15 இந்துக்களும் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். தினமும் நோன்பு முடியும் வேளையில் அவர்கள் சிறை வளாகத்தி்ல உள்ள கோவில் முன்பு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகிறது.
வீட்டு உணர்வை ஏற்படுத்த...
இதுகுறித்து திருட்டு வழக்கில் கைதான ராகேஷ் குமார் கூறுகையில், ‛‛நான் கடந்த 2 ஆண்டுகளாக ரமலான் நோன்பு கடைப்பிடிக்கிறேன். கடந்த ஆண்டு சலீம் என்பவருடன் நோன்பு கடைப்பிடித்தேன். தற்போது சிறை அறையை ஜாவித் கான் என்பவருடன் பகிர்ந்து கொண்டு அவருடன் நோன்பை பின்பற்றி வருகிறேன். என்னுடன் இருப்பவர்களுக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். இதனால் நோன்பை கடைப்பிடித்து வருகிறேன்'' என்றார்.
ஒரே கலாசார சூழல்
வரதட்சணை வழக்கில் கைதான ஹரிராம் கூறுகையில், ‛‛முஸ்லிம்கள் வேறுபாடு கொண்டவர்கள் அல்ல. அவர்களும் நம்மை போன்றவர்கள் தான். நாம் அனைவரும் ஒரே கலாசார சூழலில் ஒன்றாக வாழ வேண்டும். இதனால் நோன்பு கடைப்பிடிக்கிறேன்'' என்றார். வழிப்பறி வழக்கில் கைதான தினேஷ் குமார் கூறுகையில், ‛‛நோன்பு கடைப்பிடிப்பது உடலை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும், சுயபரிசோதனை செய்து கொள்ள உதவுகிறது'' என்றார்.
மதநல்லிணக்கத்துக்கு உதாரணம்
இதுபற்றி மோசடி வழக்கில் கைதான அக்பர் அலி கூறுகையில், ‛‛மதநல்லிணக்கத்துக்கு நாங்கள் உதாரணமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். சிறையில் எனக்கு ஏராளமான இந்து நண்பர்கள் உள்ளனர். எங்களுக்குள் பிரிவினை இல்லை. சிறை வளாகத்துக்குள் அமைதியான சூழல் நிலவுவதோடு சொந்த வீடு போன்று நடமாடுகிறோம்'' என்றார்.
50 ஆண்டு பாரம்பரியம்
சிறையில் முஸ்லிம்கள், இந்துக்கள் நோன்பு இருப்பது பற்றி ஜெயிலர் அசோக் சுக்லா கூறுகையில், ‛‛ரமலான் மாதத்தில் இந்துக்கள்-முஸ்லிம்கள் இணைந்து சிறையில் நோன்பிருக்கும் பாரம்பரியம் எப்போது துவங்கியது என்பது தெரியவில்லை. ஆனால், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இது துவங்கப்பட்டுள்ளது. இந்து-முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு ஒன்றாக அடைக்கப்பட்டபோது தான் இந்த நடைமுறை முதன் முதலில் துவங்கியது என சொல்கின்றனர்'' என்றார்.
பேரீச்சம் பழம் வழங்கல்
இதுபற்றி சிறை சூப்பிரண்டு எச்பி சிங் கூறுகையில், ‛‛ரம்ஜானையொட்டி இந்துக்கள் சிலரும் சிறையில் நோன்பிருக்கின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து நோன்பிருப்பதை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதனால் அவர்களுக்கு பால், டீ, பேரீச்சம் பழம் வழங்குகிறோம் '' என்றார்.