முதல்வர் பதவிக்கு "இது" ஆகாதே! உ.பியை துரத்தும் பல்லாண்டு துரதிர்ஷ்டம்.. ஆதித்யநாத் என்ன செய்வார்?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பு ஏற்பவர்கள் முழுவதுமாக 5 ஆண்டு ஆட்சியை முடித்தது இல்லை. எம்எல்சிக்களாக இருந்தவர்கள் மட்டுமே 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்துள்ளனர். இந்த வரலாற்றை தற்போதைய தேர்தலில் எம்எல்ஏவான யோகி ஆதித்யநாத் மாற்றி காட்டுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் அதிக சட்டசபை தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு 403 தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக 255, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111, ஏடிஏஎல் 12, ஆர்எல்டி 8, நிசாத், எஸ்பிஎஸ்பி தலா 6, காங்கிரஸ் 2,மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன.
உத்தர பிரதேசத்தை தட்டி தூக்கும் பாஜக.. மீண்டும் அரியணை ஏறும் யோகி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
யோகி ஆதித்யநாத் வெற்றி
இங்கு ஆட்சி அமைக்க 202 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மீண்டும் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த தேர்தல் மூலம் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்த நிலையில் யோகி ஆதித்யநாத் பாஜகவை வெற்றி பெற செய்துள்ளார். மேலும் அவரும் தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முதலாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு கோரக்பூர் நகர் தொகுதியில் வென்று எம்எல்ஏவாக மாறியுள்ளார்.
சாதனை என்ன
உத்தர பிரதேச மாநிலத்துக்கு முதன் முதலாக 1952 மே 20ல் சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 70 ஆண்டில் 21 பேர் முதல்வர்களாக பொறுப்பு வகித்துள்ளனர். இதில் 5 ஆண்டு பதவியை முழுவதுமாக பூர்த்தி செய்து அடுத்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று யாரும் ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் இல்லை. இதை யோகி ஆதித்யநாத் தகர்த்து சாதனை படைத்துள்ளார். இதுதவிர உத்தர பிரதேசத்தில் பாஜக முதல்வராக இருந்து மீண்டும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு யோகி ஆதித்யநாத் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
முழுமை அடையாத முதல்வர்கள்
இங்குள்ள 21 பேர் முதல்வர்களாகி உள்ளனர். இதில் சிலர் ஒருமுறை மட்டுமே பதவி வகித்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி 4 முறையும், காங்கிரசின் நாராயண் தத் திவாரி, சமாஜ்வாதி கட்சியின் முலாயம்சிங் யாதவ் ஆகியோர் தலா 3 முறையும் முதல்வராகி உள்ளனர். இவர்கள் தவிர வேறு சில தலைவர்களும் 2 முறை முதல்வராகி உள்ளனர். தற்போதைய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் 2000 முதல் 2002 வரை முதல்வராக இருந்துள்ளனர். இதில் மாயாவதி தவிர வேறு தலைவர்கள் யாரும் 5 ஆண்டு முதல்வர் பதவியை அலங்கரித்தது இல்லை.
மாயாவதியின் பிள்ளையார் சுழி
அதாவது உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு ராசி உள்ளது. இங்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏக்களாக முதல்வர் பொறுப்புக்கு வந்த நபர்களில் யாரும் 5 ஆண்டு முழுமையாக பதவியை அனுபவித்தது இல்லை. மாயாவதி 4 முறை முதல்வராக இருந்தாலும் கூட ஒரு முறை மட்டுமே முழுமையாக உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளார். அதுவும் சமீபத்தில் தான் நிகழ்ந்தது. இவரை தொடர்ந்து தான் உத்தர பிரதேச முதல்வர்கள் 5 ஆண்டு முழுமையாக ஆட்சியை முடித்து வருகின்றனர்.
எம்எல்சிக்கள் மட்டுமே...
அதாவது கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆகியோர் 5 ஆண்டுகள் முழுவதும் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். இதில் 2007 முதல் 2012 வரை மாயாவதி, 2012ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ், 2017 ல் இருந்து 2022 வரை யோகி ஆதித்யநாத் ஆகியோர் முதல்வராகி இருந்தனர். ஆனால் இந்த காலக்கட்டத்தில் மூன்று பேரும் எம்எல்ஏக்களாக இல்லை. இவர்கள் உத்தர பிரதேச மேல்சபை உறுப்பினர்களாக(எம்எல்சி) இருந்தனர். இதனால் தான் மூவரும் முதல்வர் பதவியை 5 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
மாற்றுவாரா யோகி ஆதித்யநாத்
இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத் தற்போது கோரக்பூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று உத்தர பிரதேசத்தில் முதல்வராக உள்ளார். இவர் 5 ஆண்டு பதவியை பூர்த்தி செய்தால் அது புது வரலாறாக மாறும். அதோடு, எம்எல்சிக்களாக இருப்பவர்கள் மட்டுமே உத்தர பிரதேசத்தில் 5 ஆண்டு முழுமையாக முதல்வர் பதவியில் இருக்க முடியும் என்ற மூடநம்பிக்கையை அவர் உடைப்பார். இல்லாவிட்டால், எம்எல்ஏக்களாக முதல்வர் பதவிக்கு வருபர்கள் எப்போது வேண்டுமானாலும் பதவியை இழக்கலாம் என்ற ராசி தொடரும்.
விதிவிலக்கு
இவர்கள் தவிர 1999 நவம்பர் 12 முதல் 2000 அக்டோபர் 28 வரை பாஜகவின் ராம்பிரகாஷ் குப்தா என்பவர் எம்எல்சியாக இருந்தபடி முதல்வர் பொறுப்பு வகித்தார். ஆனால் இவர் தேர்தல் முடிந்த கையோடு முதல்வர் ஆகாமல் ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடியால் அவரை முதல்வர் பதவி தேடிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.