'பா.ஜ.க ஆட்சியில்தான் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்'.. சொல்வது ஆர்.எஸ்.எஸ்.சின் இஸ்லாமிய பிரிவு
லக்னோ: பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது. மற்ற கட்சிகள், இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். இஸ்லாமிய மக்கள் இதனை புரிந்து வாக்களிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தல்.. பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கோரக்பூரில் ஆதித்யநாத் போட்டி
உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல்
பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் உ.பி.யில் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.
அடுத்தடுத்து விக்கெட்கள்
சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக தீவிரமான பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த கட்சிக்கு அடுத்தடுத்து அடி விழுந்தது. மாநிலத்தின் முக்கிய அமைச்சர்களான ஸ்வாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான், தரம் சிங் சைனி ஆகியோர் அதிரடியாக பாஜகவில் இருந்து வெளியேறினார்கள். இதேபோல் பாஜக எம்.எல்.ஏக்கள் முகேஷ் வர்மா, வினய் ஷக்யா, அவ்தார் சிங் பதானா, ரோஷன் லால் வெர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, பகவதி சாகர் ஆகியோரும் கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.
தலித், இஸ்லாமியர்களை மதிப்பதில்லை
தொடர்ந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வருவதால் பாஜகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. வெளியேறும் அவர்கள் அனைவரும் சேர்ந்து சொல்லும் ஒரே குற்றச்சாட்டு இஸ்லாமிய, சிறுபான்மையின மக்களை பாஜக கண்டுகொள்வதில்லை என்பதுதான். இதேபோல் தலித் மக்களையும் பாஜக புறக்கணிக்கிறது என்றும் அவர்கள் குற்றச்சாட்டுகளாக கூறியுள்ளனர். இந்த நிலையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் நலம் விரும்பி பாஜக
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ' பாஜக இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது என்ற தவறான கருத்து மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. பா.ஜ.க இஸ்லாமியர்களின் மிகப்பெரிய நலம் விரும்பி என்பதே உண்மை. மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் இஸ்லாமியர்களுக்காக அறிவித்துள்ள திட்டங்களை பார்த்தாலே இது தெரியும்.
மக்கள் வாக்களிக்க வேண்டும்
ஆனால் பிரதமர் மோடியின் அரசு 36 வகை நலத்திட்டங்களை சிறுபான்மையினர் நலனுக்காக அமல்படுத்தியுள்ளது. ஆகவே உண்மையில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். இஸ்லாமிய மக்கள் இதனை புரிந்து வாக்களிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.