"ஞானவாபி" மசூதி வழக்கு விசாரணைக்கு உரியது.. வாரணாசி கோர்ட் அதிரடி.. துள்ளி குதிக்கும் இந்து பெண்கள்
ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
லக்னோ: ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஞானவாபி மசூதிக்குள் வழிபாடு நடத்தக்கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று தெரிவித்துள்ளதுடன், இந்த வழக்கை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகம் தரப்பு தொடர்ந்த மனுவையும் நிராகரித்துள்ளது நீதிமன்றம்.
ஆனாலும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
கியான்வாபி மசூதி இந்து கோயிலா? - விண்வெளி ஆய்வு - பிரதமர் அலுவலகத்திலிருந்து பறந்த உத்தரவு
5 பெண்கள்
இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச்சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது.. இந்த சிலைக்கு வருஷத்துக்கு ஒருமுறை பூஜைகளும் நடத்தப்படுகின்றன.. இதனிடையே இந்த அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி, வாரணாசி கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம், 5 இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்... இந்த மனுவின் மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது...
ஞானவாபி மசூதி
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், வீடியோவுடன் கூடிய ஆய்வு நடத்தத்தடை விதிக்க கோர்ட் அப்போது மறுத்துவிட்டது. பிறகு, 3 நாட்கள் ஞானவாபி மசூதி வளாகத்தில் நடைபெற்ற கள ஆய்வு நடைபெற்றது.. இதில் முக்கிய அம்சமாக ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது... சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட, அதன்படியே மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
"சிவலிங்கம்"
இதனிடையே, ஞானவாபி மசூதியின் ஆய்வுக்கு வித்திட்ட மனு சரியானதுதானா? என்பது குறித்து முன்னுரிமை அளித்த முடிவு செய்யுமாறும் மாவட்ட நீதிபதியை சுப்ரீம்கோர்ட் கேட்டுக் கொண்டது... "சிவலிங்கம்" கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த மசூதியை பாதுகாக்கவும், முஸ்லிம்கள் நமாஸ் செய்ய அனுமதிக்கவும், மே 17ம் வழங்கிய தன்னுடைய தீர்ப்பிலும் சுப்ரீம்கோர்ட் கூறியிருந்தது.
மசூதி
மசூதிக்குள் இந்து வழிபாட்டு அடையாளங்கள் இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம்கோர்ட்டின் வழிகாட்டல்படி மாவட்ட நீதிமன்றமும் இவ்வாறாக விசாரணைகளை நடத்தியது.. இந்த சர்ச்சைக்குரிய வழக்கின் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, 144 தடையுத்தரவு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இந்து முஸ்லிம் மக்கள் கூட்டாக வசிக்கும் பகுதிகளில் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.. போலீசார் கொடி அணிவகுப்புகளை நடத்தி, இந்து முஸ்லிம் இரு தரப்பினரையும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஹிந்துக்கள் குஷி
முன்னதாக, மசூதி தரப்பை சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும், இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனவும், அவர்களுடைய வாதங்களை நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்தார்கள்.. இரு தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்ததையடுத்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்த தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது.. அதன்படி, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், இதன் மீதான விசாரணை வரும் செப்டம்பர் 28 முதல் தொடங்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கியான்வாபி
இந்த தீர்ப்பையடுத்து, அந்த பகுதி இந்துக்கள், தங்களின் முதல் வெற்றியாக இதனை கொண்டாடி வருகின்றனர். அதே சமயத்தில், எதிர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.. இந்த வழக்கில் வெற்றி பெற்ற இந்து பெண்கள் தரப்பில் மஞ்சு வியாஸ் சொல்லும்போது, "இன்று பாரதம் மகிழ்ச்சியாக இருக்கும்... என்னுடைய இந்து சகோதரர்கள், சகோதரிகள் தீபம் ஏற்றி மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும்" என்று கூறினார்.. அதேபோல இன்னொரு மனுதாரர் சோஹன் லால் ஆர்யா சொல்லும்போது, "இந்து சமூகத்துக்கு கிடைத்த வெற்றி. அடுத்த விசாரணை வரும் 22ம் தேதி நடக்கிறது. கியான்வாபி கோயிலுக்கு அடிக்கல் இது அடிக்கல்... மக்கள் அமைதியாக இருக்க வேண்டும்" என்றார்.
குஷி + பூரிப்பு
இதனிடையே, முஸ்லிம்கள் தரப்பில் அஞ்சுமன் இந்திஜாமியா மஸ்ஜித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிராகுதின் சித்திக் இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, "இந்த வழக்கில் மாவட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்" என்றார்.. எனினும், இந்துக்கள் தரப்பில் இதை தங்களின் முதல் வெற்றியாக அங்கே ருசிக்க தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.