வருண் காந்திக்கு பாஜக தலைமை சீட் கொடுக்காததற்கு இதுவே காரணம்.. போட்டு உடைத்த மேனகா காந்தி
லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிலிபட் தொகுதியில் போட்டியிட இந்த முறை வருண் காந்திக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அப்செட்டில் வருண் காந்தி இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவருக்கு சீட் வழங்காததற்கான காரணம் குறித்து மேனகா காந்தி பேசியுள்ளார்.
இந்திரா காந்தியின் மருமகளும் மறைந்த சஞ்செய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி பாஜகவில் உள்ளார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வரும் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தியும் பாஜக எம்பியாக இருந்து வருகிறார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள பிலிபட் தொகுதியில் கடந்த இரணடு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வருண் காந்திக்கு இந்த முறை பாஜக தலைமை சீட் வழங்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்தார். பிலிபட் தொகுதிக்கு பதிலாக ரேபேரபலி தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை முன்வந்தது. ஆனால், காந்தி குடும்பத்தினரை எதிர்த்து போட்டியிட போவது இல்லை என்று அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் வருண் காந்தி.
பிலிபட் தொகுதியில் சீட் கொடுக்காத நிலையில், உருக்கமான கடிதத்தையும் தொகுதி மக்களுக்கு எழுதியுள்ளார். வருண் காந்தியின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்பதை அவரது ஆதரவாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இதனிடையே, வருண் காந்தியின் தாயாரும் சுல்தான்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான மேனகா காந்தி, இவ்விவகாரம் குறித்து முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேனகா காந்தி கூறியதாவது:- மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு தருணங்களில் வருண் காந்தி தொடர்ந்து விமர்சித்து வந்ததே அவருக்கு சீட் மறுக்கப்பட காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். போட்டியிட சீட் கொடுக்கப்படாவிட்டாலும் வருண் காந்தி அங்கு மக்கள் பணியாற்றுவார்.
எனக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட வருண் காந்தி விரும்புகிறார். எனினும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பிலிபட் தொகுதி வருண் காந்தி சேவை செய்யும் இடம். அவருக்கு இந்த முறையும் அங்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், பாஜக தலைமை முடிவு எடுத்துவிட்டது. அதுவே இறுதியானது"என்றார்.
அதேபோல் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மேனகா காந்தி, "பிற தலைவர்களை பற்றி நான் கருத்து கூறுவது இல்லை. அவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்றார்.
மேனகா காந்தி போட்டியிடும் சுல்தான்பூர் தொகுதியில் வரும் 25 ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. எட்டு முறை எம்பியாக இருந்துள்ள மேனகா காந்தி, இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் பிரச்சினைகளை மையப்படுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிலிபட் தொகுதியில் எம்பியாக இருக்கும் வருண் காந்தி, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுக்கு எதிராகவே கருத்து கூறியிருந்தார். பாஜக எம்பி ஒருவரே இப்படி கருத்து கூறியது கட்சி தலைமைக்கு சற்று தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் வருண் காந்திக்கு இந்த முறை பிலிபட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications