தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே விழாக்களில் பங்கேற்க வேண்டும் - ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவுரை
கொரோனா பரவல் ஒரு பக்கம் இருந்தாலும் பண்டிகைகளும் வரிசை கட்டி வருகின்றன. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
லக்னோ: பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு 45 ஆயிரத்தை தொட்டுள்ளது.

மத்திய அரசு அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான சூழல் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ரஜேஷ் பூஷன்,"நாட்டில் கொரோனா 2ஆம் அலை இன்னும் முடியவில்லை. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 279 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100ஐ கடந்திருந்தது. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் இறுதியில் 42ஆகக் குறைந்துள்ளது. நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5-10% வரை உள்ளது. குறிப்பாகக் கேரளாவில் இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை உள்ளது. இதர மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் 10,000 க்கும் குறைவாகவே உள்ளது என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 16% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் 54% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் மட்டும் 18.38 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தினசரி சராசரியாக 59.29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைசி வாரம் மட்டும் தினசரி 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் செயலர் ரஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். சிக்கிம், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ராஜேஷ் பூசன் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டிருந்தாலும் பொது இடங்களில் முக கவசங்களை தொடர்ந்து அணிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் அதேபோல நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதால் 2ஆம் டோஸை குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபடவில்லை என்று கூறியுள்ள ராஜேஷ் பூசன், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் வீடுகளில் இருந்தே நாம் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க வேண்டும். அதைத் தாண்டி கட்டாயம் ஒன்றுகூட வேண்டும் என்றால், அனைவரும் 2 டோஸ் வேக்சின் போட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காலத்தில் பண்டிகைகளை பாதுகாப்புடன் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா.
பண்டிகை காலங்களில் கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள அவர், மக்கள் தடுப்பூசி செலுத்துவது அவசியமான என்று கூறியுள்ளார். நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளாவில் பண்டிகை காலத்தில்தான் கொரோனா அதிகரித்தது. எனவே மக்களுக்கு அக்டோபர் மாதத்திற்குள் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்க வேண்டும் என்ற இலக்கு நிர்யணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் தினசரி ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications