ரயிலில் நமாஸ் செய்த இஸ்லாமியர்கள்.. வீடியோ எடுத்து புகார் கொடுத்த பாஜக எம்எல்ஏ.. குலுங்கும் உ.பி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஒரு ரயிலில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்ததை வீடியோ எடுத்து பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே துறை இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் கலவையான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. பெரும்பாலான மக்கள், அது அவர்களுடைய வழிபாட்டு உரிமை என்றும், சிறிது நேரம் அவர்கள் தொழுகை நடத்துவதால் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயத்தில், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொதுஇடங்களில் இதுபோன்ற தொழுகை நடத்த தடைவிதிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.
அதெல்லாம் முடியாது! ஒரு லட்சம் தர்றோம்.. இளம் நடிகையை மிரட்டி ஆபாச படம்! போலீசுக்கு ஓடிய நடிகர்!
இஸ்லாமியர்களும் தொழுகையும்..
இஸ்லாமியர்கள் நாளொன்றுக்கு 5 வேளை தொழுகை செய்வது வழக்கம். இஸ்லாம் மதம் கூறும் கடமைகளில் முதன்மையானது கடவுளை தொழுவது. இதனால் வெளியே எங்கே சென்றாலும், சிறிய வாய்ப்பு இருந்தால் கூட சில இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை பார்த்திருப்போம். இதற்கு மற்ற மதத்தினர் இடையூறு செய்வது இல்லை. ஆனால், சமீபகாலமாக மத வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதை கூட ஒருசிலர் குற்றமாக கருதும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
புயலை கிளப்பிய லூலூ சர்ச்சை
உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் புதிதாக அமைந்த லூலூ வணிக வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் வாடிக்கையாளர்கள் சிலர் தொழுகை நடத்தினர். இதனை வெளியே இருந்து வீடியோ எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையானது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு இந்தியாவில் அனுமதி தந்தால், அவர்கள் இங்கு மதப் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பொது இடத்தில் தொழுகை நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சில இந்து அமைப்புகள் போராட்டங்களிலும் ஈடுபட்டன.
ரயிலில் தொழுகை - கிளம்பியது சர்ச்சை
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஒரு ரயிலில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. நேற்று முன்தினம், சத்யகிரஹா எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல ரக்சாலில் இருந்து ஆனந்த் விஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது. காடா என்ற ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, அங்கு ஒரு பெட்டியில் இருந்த 4 இஸ்லாமியர்கள் கீழே துண்டை விரித்து தொழுகை நடத்தினர். இதனை அங்கிருந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
பாஜக எம்எல்ஏ புகார்
அந்த வீடியோவுக்கு மேலே முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி எழுதியுள்ள பதிவில், "சத்யகிரஹா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்தக் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 4 பேர் அடுத்த பயணிகள் நடக்கக்கூடிய பாதையை அடைத்து தொழுகை செய்து கொண்டிருந்தனர். அதுவும் ஸ்லீப்பர் கோச்சில் இதுபோல அவர்கள் செய்கின்றனர். இது மற்ற பயணிகளுக்கு எத்தனை அசவுகரியங்களை ஏற்படுத்தும்? பொது இடத்தில் எப்படி அவர்கள் தொழுகை செய்யலாம்? இது மிகவும் தவறு. இவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.