இந்தியாவின் வளர்ச்சியை பிபின் ராவத் விண்ணுலகிலிருந்து பார்ப்பார்.. உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
லக்னோ: எந்த சூழ்நிலையிலும் இந்தியா நிலைகுலைந்து விடாது எனவும், இன்னும் வலுவானதாக, வளமானதாக உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சரயு, ரப்தி, ககாரா, ரோகிணி உள்ளிட்ட ஐந்து நதிகளை இணைக்கும் பிரம்மாண்ட நீர்ப்பாசனத் திட்டமான சரயு நீர்ப்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு அர்ப்பணித்தார்.
இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தக் கூடியது என்றும், இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் ரூ.9,800 கோடி செலவிலான இந்தத் திட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,600 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது: உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்க பாசன திட்ட பணிகள் 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும், ஆனால் ஒருங்கிணைப்பு போதிய கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியாக இல்லாததன் காரணமாக இந்த திட்டம் மிகவும் தாமதமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை எனக் கூறினார்.

விவசாயிகள் பயன் அடைவர்
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாரதப் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் அதிக அளவு காரணமாக வெறும் நான்கு ஆண்டுகளில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் என்றும், தற்போது இந்த திட்டத்தின் காரணமாக அவர்கள் பெரிய அளவில் பயன் அடைவார்கள் என்றும் அதிக அளவில் பயிர்களை சாகுபடி செய்ய முடியும் எனவும் கூறினார்.

பிபின் ராவத் துணிச்சலானவர்
கடந்த சில நாட்களுக்கு முன், குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குறித்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவின் முதல் முப்படை தளபதியை நாம் ஹெலிகாப்டர் விபத்தில் இழந்து இருப்பதாகவும், இது ஒவ்வொரு தேசப்பற்றாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு என்றார். உயிரிழந்த பிபின் ராவத் மிகவும் துணிச்சலானவர் என்றார்.

துக்கம் அனுசரிக்கும் இந்தியா
கடினமாக உழைக்க கூடிய பிபின் ராவத், தேசம் ராணுவத்தில் தற்சார்பு தன்மை உடையதாக மாற கடுமையாக பாடுபட்டவர் எனவும், மண்ணை விட்டு மறைந்தாலும் நமது மாபெரும் வீரரான பிபின் ராவத், இந்தியா வளர்ச்சியை நோக்கி நடை போடுவதை விண்ணுலகிலிருந்து காண்பார் என்றும் அவரது மறைவுக்காக இந்தியா துக்கம் அனுசரிக்கிறது என கூறினார்.
Recommended Video

இந்தியாவை வலிமையானதாக மாற்றுவோம்
இந்தியாவின் வளர்ச்சியை, வளர்ச்சியின் வேகத்தை தடுக்க யாராலும் முடியாது எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ஒருபோதும் நிலைகுலைந்துவிடாது எனவும், இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வெளியிலிருந்து வரும் சவால்களையும், உள்நாட்டு சவால்களையும் சேர்ந்து சமாளிக்க வேண்டும் எனவும், இந்திய தேசத்தை இன்னும் வளமானதாகவும் வலுவானதாகவும் மாற்ற உருவாக்குவோம் எனவும் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications