'பிரதமர் காலி நாற்காலிகளை கண்குளிர பார்த்திருப்பார்.. இப்படி பண்ணிடீங்களே'.. கலாய்த்த அகிலேஷ் யாதவ்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த தவறி விட்டது என்று குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக பஞ்சாப் அரசு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கடும் கண்டனம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார்.' என்றார்.

விசாரணையில் இறங்கிய உள்துறை அமைச்சகம்
பஞ்சாப்பில் என்ன நடந்தது? என்பது குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. மேலும் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

அகிலேஷ் யாதவ் கிண்டல்
இந்த நிலையில் பஞ்சாப் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், 'பஞ்சாப் மக்களும், விவசாயிகளும் பிரதமர் மோடியை நிகழ்ச்சி மேடைக்கு வர அனுமதித்திருக்க வேண்டும். அவர் அங்கு இருக்கும் காலி நாற்காலிகளைப் பார்த்து நன்றாக உணர்ந்திருப்பார்.

காலி நாற்காலிகளை பார்த்திருப்பார்
உ.பி. கூட்டங்களில் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் பேசியதைபோல் பஞ்சாபிலும் காலி நாற்காலிகளிடம் பிரதமர் பேச்சு கொடுத்து இருப்பார்' என்று அகிலேஷ் யாதவ் கலாய்த்து தள்ளினார். பிரதமருக்கு அனுமதி கொடுத்து இருந்தால் மூன்று மத்திய கறுப்புச் சட்டங்கள் ஏன் கொண்டு வரப்பட்டன, பின்னர் அது ஏன் திரும்பப் பெறப்பட்டன என்பதை பாஜகவும், பிரதமரும் சொல்ல வேண்டும். அதை அறியாமல் நாடு இழந்துவிட்டது, இதைத்தான் நான் வருந்துகிறேன்' என்று அவர் கூறினார்












Click it and Unblock the Notifications