பாஜக கோட்டை விட்ட தொகுதிகளை சரியாக கேட்ச் செய்த சமாஜ்வாதி & சிறு கட்சிகள்! சோனியா கோட்டை தகர்ந்தது
லக்னோ: 2022 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று 2 வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் அங்குள்ள பாஸ்சிம், ஆவாத், புந்தேல்கண்ட், புர்வாஞ்சல் மண்டலங்களில் பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் இழந்த இடங்களை சமாஜ்வாடி மற்றும் சிறிய கட்சிகள் கைப்பற்றி இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் முறை தேர்தலில் போட்டியிட்டவர்களிடம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். யோகி தலைமையிலான பாஜக அரசில் உத்தரப்பிரதேச துணை முதலமைச்சராக பதவி வகித்த கேசவ் பிரசாத் மௌரியா கமெரவதி தொகுதியில் அப்னா தளம் கட்சி வேட்பாளர் பல்லவி பட்டேலிடம் தோல்வியடைந்துள்ளார்.

புந்தேல்கண்ட்:
கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்ற பாஜக இம்முறை 16 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளை சமாஜ்வாடி கட்சி கைபற்றி இருக்கிறது.

புர்வாஞ்சல்:
பிரதமர் மோடியின் வாரணாசி, யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் உள்ளிட்ட தொகுதிகளை கொண்ட இந்த மண்டலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்க்கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டன. இதில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் பாஜக வென்றாலும் இந்த மண்டலத்தில் இழப்பை சந்தித்து இருக்கிறது.

மோடி - யோகியின் மண்டலத்திலேயே பாஜகவுக்கு இழப்பு:
2017 ஆம் ஆண்டு 114 தொகுதிகளை வென்ற பாஜகவால் இம்முறை 86 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. கடந்த முறை 12 இடங்களை இந்த மண்டலத்தில் வென்ற பகுஜன் சமாஜ் இம்முறை ஒரேஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. அதே நேரம் கடந்த முறை 16 தொகுதிகளை தன்வசம் வைத்திருந்த சமாஜ்வாடி இம்முறை 55 தொகுதிகளில் வென்றிருக்கிறது.

பாஸ்சிம்:
மேற்கு உத்தரப்பிரதேச மண்டலமான இது கரும்பு பெல்ட் என்றும் ஹரித் பிரதேஷ் என்றும் அழைக்கப்படுகிறது. மிகப்பெரும் மதக்கலவரத்துக்கு இலக்கான முசாஃபர்நகரை உள்ளடக்கிய இப்பகுதியில் கடந்த முறை 109 தொகுதிகளை வென்ற பாஜக இம்முறை 93 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதே நேரம் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணியான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இம்முறை 8 இடங்களில் வெற்றிபெற்று உள்ளது. கடந்த முறை இக்கட்சி வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வென்று இருக்கிறது.
இந்த மண்டலத்துக்கு உட்பட்ட கர்ஹால் தொகுதியில் தான் அகிலேஷ் யாதவும் போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார். ஜாட் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான அலை பாஜகவுக்கு எதிராக வீசும் என கணிக்கப்பட்டது. ஆனால், அதிக இழப்பை இம்முறை பாஜக சந்திக்கவில்லை என்பதே உண்மை,

ஆவாத்:
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இந்த மண்டலம் கருதப்பட்டது. தலைநகர் லக்னோ, ரேபரேலி, கான்பூர் என முக்கிய தொகுதிகள் இந்த மண்டலத்துக்குள் வருகின்றன. இதிலும் பாஜக அதிக இழப்பை சந்திக்கவில்லை. கடந்த 2017 தேர்தலில் 67 இடங்களில் வென்ற அக்கட்சி இம்முறை 62 இடங்களில் வென்றுள்ளது. சமாஜ்வாடி கடந்த முறை 10 இடங்களில் வென்ற நிலையில் இம்முறை 18 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 3 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வெற்றி கண்டுள்ளன.












Click it and Unblock the Notifications