8 ஆண்டுகளாக தொடர்ந்த அவமானம், தோல்வி, விமர்சனம்.. அத்தனையும் கடந்து ரசிகர்களை வென்ற சஞ்சு சாம்சன்!
லக்னோ: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில் 86 ரன்கள் சஞ்சு சாம்சன் விளாசி ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இத்தனை காலமாக அவர் சந்தித்த பிரச்சினைகளையும், அவற்றை எப்படி கடந்துவந்தார் என்பதையும் பார்க்கலாம்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர் மற்றும் கிளாசன் அதிரடியால் 40 ஓவர்களுக்கு 249 ரன்கள் விளாசியது.
இதனைத்தொடர்ந்து 250 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்ததோடு, அதிக டாட் பால்களையும் விளையாடியது. இறுதி நேரத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடியும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் கடைசி வரை போராடிய சஞ்சு சாம்சன்63 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.

இதயங்களை வென்ற சாம்சன்
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி போட்டியில் வெற்றிபெற்றாலும், சஞ்சு சாம்சன் அனைத்து ரசிகர்களின் இதயங்களையும் வென்றுவிட்டார் என்றே கூற வேண்டும். கடைசி நேரத்தில் சஞ்சு சாம்சனின் சிறு அஜாக்ரதையால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது என்று விமர்சிக்கப்பட்டாலும், இதுபோன்ற அனுபவங்கள் சஞ்சு சாம்சனுக்கு பெரிய வகையில் உதவும் என்று பார்க்கப்படுகிறது.

சறுக்கிய சஞ்சு சாம்சன்
கடைசி 2 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவை என்ற நிலையில், பந்துவீச்சாளரான ஆவேஷ் கானை 5 பந்துகளை சந்திக்க வைத்தது சஞ்சு சாம்சனின் தவறாகவே பார்க்கப்படுகிறது. மூன்றாவது பந்தில் 2வது ரன்னுக்கு ஓடியது ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது என்றே விமர்சிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறுசிறு தவறுகளும் போட்டியின் முடிவை மாற்றக் கூடியவை என்று இளம் வீரர்கள் இந்தப் போட்டியின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

2015ல் இந்திய அணியில் இடம்
ஆரம்ப காலங்களில் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், 2015ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர். ஆனால் இந்திய அணிக்காக களமிறங்க, அவர் வெகு காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு அவரின் இன்கன்சிஸ்டன்சி பிரச்சினையும், தேவையில்லாத நேரத்தில் காட்டப்படும் ஆக்ரோஷமுமே காரணமாக பார்க்கப்பட்டது.

இன்கன்சிஸ்டன்சி பிரச்சினை
இதில் ஒரு பரிதாபம் என்னவென்றால், ஐபிஎல் தொடரிலும் இன்கன்சிஸ்டன்சி பிரச்சினை தொடர்ந்ததுதான். ஆனால் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பதவியேற்ற பின்னர், சஞ்சு சாம்சனின் பேட்டிங்கில் அதிக முதிர்ச்சியும், ஷாட் தேர்வில் தெளிவும் ஏற்பட்டது. அதன் காரணமாகவே சீனியர் அணி பங்கேற்கும் முக்கியத் தொடர்கள் இல்லாமல், இரு நாட்டு அணிகள் பங்கேற்கும் தொடர்களில் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகிறார்.

ஒருநாள், டி20 அணியில் இடம்?
நேற்றைய ஆட்டத்தில் கடின பிட்ச் மற்றும் பந்துவீச்சை எதிர்கொண்டு சஞ்சு சாம்சன் ஒற்றை ஆளாய் போராடியது அவர் மீதான ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளோடு ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் தொடர்ந்து ஆடி வரும் நிலையில், சிறந்த ஆட்ட நுணுக்கமும் எந்தவித பிரச்சினையும் இல்லாத சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதேபோல் ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விரையில் முக்கிய தொடர்களில் வாய்ப்பு
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடாத ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சஞ்சு சாம்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது விரைவில் சீனியர் அணியில் இடம்பெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications