விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்! உ.பி-இல் 61%, கோவாவில் 79%, உத்தரகண்ட்டில் 62% வாக்குப்பதிவு
லக்னோ: உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்தது. அதேபோல் உபி-இல் இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் அமைதியாக நடைபெற்று முடிந்தது.
உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்டமாகக் கடந்த 10ஆம் தேதி 58 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜாட் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் இந்த 58 தொகுதிகளில் அடங்கும். முதற்கட்ட தேர்தலில் 58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
பிற்பகல் 3 மணி நிலவரம்.. உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 49.24 சதவீதம் வாக்குகள் பதிவு!
இந்த நிலையில் இன்றைய தினம் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, பாடான், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 தொகுதிகளில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற உத்தரப் பிரதேச 2ஆம் கட்ட தேர்தலில் 61.06% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதேபோல இன்றைய தினம் உத்தரகண்ட் மற்றும் கோவா மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவாவில் இன்று 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக சன்குலிம் தொகுதியில் 89.64% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தெற்கு கோவாவில் 78% வாக்குகளும் வடக்கு கோவாவில் 79% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இன்றைய நடைபெற்ற வாக்குப்பதிவில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 14 இவிஎம்கள் மற்றும் 8 பேலெட்டுகள் மாற்றப்பட்டதாகவும் கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அங்கு 62.5 சதவீத வாக்குகளைப் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் அமைதியான முறையிலே தேர்தல் நடைபெற்று முடிந்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.