ரோட்ல பாருங்க எவ்வளவு குழி.. பேட்டி தரும் போதே பின்னால் நடந்த "சம்பவம்".. உ.பி நிலைமையை பாருங்க!
லக்னோ: சாலை விபத்துக்கள் அதிக அளவில் கவனக்குறைவால் நடக்கிறது என்று கூறினாலும் அதே அளவுக்கான விபத்துக்கள் தரமற்ற சாலைகளினால்தான் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்த கூற்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் உண்மையாக்கியிருந்தன. கடந்த 2018-2020 வரை சுமார் 5,626 பேர் சாலையில் உள்ள பள்ளத்தால் உயிரிழந்துள்ளதாக இந்த தரவுகள் சொல்கிறது.
இதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தில் மோசமான சாலை குறித்து ஒருவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போதே அப்பகுதியில் சாலை விபத்து நிகழ்ந்துள்ள சம்பவம் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 1.55 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு சுமார் 426 பேர் என்றும் ஒரு மணி நேரத்திற்கு 18 பேர் என உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது. உயிரிழப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் சுமார் 3.71 லட்சம் பேர் இந்த விபத்துகளில் படுகாயமடைகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பேட்டி
இது போன்று விபத்துகளில் அதிகம் உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. அதேபோல விபத்துகளுக்கு அதிக வேகம், கவனக்குறைவு உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும், தரமற்ற சாலைகளும் விபத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிடுகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் குண்டும் குழியுமான சாலை குறித்து பேட்டி எடுத்துக்கொண்டிருக்கையில் விபத்து ஒன்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குண்டும் குழியுமான சாலை
பல்லியாவில் வசிக்கும் பிரவீர் குமார், சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார். அதாவது கடந்த 4 ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது என்றும், சீரமைக்கப்படாததால் குறைந்தது 20 விபத்துக்கள் இந்த பகுதியில் நடைபெறுகிறது என்றும் அவர் பேட்டியில் கூறியுள்ளார். குண்டும், குழியுமாக உள்ள அந்த சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் அங்கு பள்ளம் இருப்பதே வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

பேட்டியின்போது விபத்து
இவ்வாறு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தபோதே அந்த வழியாக வந்த மின்சார ஆட்டோ ஒன்று இவர் குறிப்பிட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கின்றனர். இந்த விபத்தில் அந்த ஆட்டோவில் பயணித்த பெண் பயணி ஒருவர் லேசாக காயமடைந்துள்ளார். குண்டும் குழியுமாக உள்ள சாலை குறித்து பேட்டியளித்துக்கொண்டிருக்கும்போதே விபத்து நடந்திருக்கும் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications