'என் சகோதரிகள் என்னுடன்'.. உ.பி.யில் பெண் வாக்காளர்களை நோக்கி காய் நகர்த்தும் பிரியங்கா.. எடுபடுமா?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியே பிரதான கட்சியாக இருக்கிறது.
பல காலம் இந்தியாவை ஆண்ட பாரம்பரியமிக்க காங்கிரஸ், உ.பி.யில் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. அங்கு பா.ஜ.க.வுக்கு அதிருப்தி அலை வீசுவதால் இந்த முறையாவது பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் துடியாய் நிற்கிறது.

காங்கிரசுக்கு ஏமாற்றம்
இந்த முறையும் உ.பி.யில் காங்கிரசுக்கு பெரும் ஏமாற்றமே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் உலா வந்தாலும் ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று காங்கிரஸ் விடாப்பிடியாக உள்ளது. இதற்காக ஏற்கனவே பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டது. இதற்காகத்தான் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி ஒரு ஆண்டுக்கு முன்பாகவே உ.பி.யில் முகாம் இருக்க தொடங்கி விட்டார்.

பிரியங்கா காந்தி
உ.பி.யில் விவசாயிகள், மக்களுக்கு எதிராக எந்த அநீதி நிகழ்ந்தாலும் இதற்கு முதல் ஆளாக குரல் கொடுக்க சென்று விடுகிறார் பிரியங்கா காந்தி. சில மாதங்களுக்கு முன்பு லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தை மிக கச்சிதமாக கையில் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் பிரியங்கா. ஒரு பக்கம் ஆளும் கட்சி, மறு பக்கம் வலுவான எதிர்க்கட்சி என்று போட்டி கடுமையாக இருக்க இவற்றை எல்லாம் தாண்டி மக்கள் மனதில் தடம் பாதிக்க பிரியங்கா காய் நகர்த்தி வருகிறார்.

பெண்களை குறிவைக்கும் பிரியங்கா
எந்தவொரு கட்சியும் ஒரு மாநிலத்தில் தடம் பதிக்க அங்குள்ள பெண்களின் மனதில் இடம் பிடிப்பது மிகவும் முக்கியம். இப்போது அதனைதான் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி. அதாவது உ.பி.யில் எந்த ஒரு மாவட்டத்துக்கு சென்றாலும் அப்பகுதி பெண்களை தனியாக சந்தித்தது அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்து வருகிறார். காங்கிரசால் முடியாதபோது அரசிடம் வற்புறுத்தி கோரிக்கைகளை நிரைவேற்ற செய்து விடுகிறார்.

என் சகோதரிகள்
உ.பி.யை கைப்பற்ற காங்கிரஸ் எப்படி திட்டமிட்டுள்ளது? என்று நிருபர்கள் கேட்கும்போதெல்லாம் ''என் சகோதரிகள் என்னுடன் இருக்கிறார்கள்'' என்று பெண்களை நம்பிக்கையுடன் வைத்து பதில் கூறுகிறார் பிரியங்கா. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் 40 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், தேர்தலில் வெற்றி பெற்றால் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்று ஏற்கனவே பிரியங்கா பரிந்துரையின் பேரில் காங்கிரசில் பெண்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரியங்கா காந்தியின் இந்த அணுகுமுறை ஈடுபாடுமா? என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications