உ.பி. 3-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது- 135 கிரிமினல் வேட்பாளர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 3-ம் கட்டமாக நாளை மறுநாள் பிப்ரவரி 20-ந் தேதி 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 3-ம் கட்ட தேர்தல் களத்தில் போட்டியிடும் 623 வேட்பாளர்களில் 135 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி 7-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரையான வாக்குப் பதிவுகள் சுமார் 60% என்ற அளவில் பதிவாகி உள்ளன.
59 இடங்களில் தேர்தல்
ஒருசில வன்முறை சம்பவங்கள் தவிர பொதுவாக உ.பி. தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிவடைந்துள்ளன. நாளை மறுநாள் பிப்ரவரி 20-ந் தேதி 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்தது.
களத்தில் 135 கிரிமினல் வேட்பாளர்கள்
இத்தேர்தல் களத்தில் மொத்தம் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 135 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் 58 வேட்பாளர்களில் 30 பேர்; பாஜகவின் 55 வேட்பாளர்களில் 25 பேர்; பகுஜன் சமாஜ் கட்சியின் 59 வேட்பாளர்களில் 23 பேர்; காங்கிரஸ் கட்சியின் 56 வேட்பாளர்களில் 20 பேர்; ஆம் ஆத்மி கட்சியின் 49 வேட்பாளர்களில் 11 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
சமாஜ்வாதியில் அதிகம்
மேலும் சமாஜ்வாதி கட்சியின் 21, பாஜகவின் 20, பகுஜன் சமாஜ் கட்சியின் 18, ஆம் ஆத்மியின் 11, காங்கிரஸின் 10 வேட்பாளர்கள் தங்கள் மீது சீரியசான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என கூறியுள்ளனர். 3-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் 59 தொகுதிகளில் 26 தொகுதிகள் வன்முறை அபாயம் கொண்டதாக சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
245 கோடீஸ்வர வேட்பாளர்கள்
அத்துடன் 623 வேட்பாளர்களில் 39% பேர் அதாவது 245 பேர் கோடீஸ்வரர்கள். சமாஜ்வாதி கட்சியின் 52, பாஜகவின் 48, பகுஜன் சமாஜ் கட்சியின் 46, காங்கிரஸின் 29, ஆம் ஆத்மியின் 18 வேட்பாளர்கள் ரூ1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் யஷ்பால் சிங் யாதவ்தான் மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளர். அவர் தமக்கு ரூ70 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.