உ.பி.: பா.ஜ.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 10 ஆனது- இன்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசில் இடம்பெற்றிருந்த அமைச்சர் தரம்சிங் சைனி உட்பட 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளில் இருந்து இன்று ராஜினாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்தும் வெளியேறினர். இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நரேஷ் சைனி, சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஹரி ஓம் யாதவ் ஆகியோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
403 இடங்களைக் கொண்ட உ.பி. சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படும்.
வெற்றிக் கொடி கட்டு... அகிலேஷ் பக்கம் அப்படியே மொத்தமாக திரும்பிய ஜாதிய வாக்குகள்-அதிர்ச்சியில் பாஜக
அகிலேஷ் கட்சியில் அடுத்தடுத்து OBC தலைவர்கள்... 2017-ல் பாஜக ஜெயிக்க காரணமான அதே வியூகம்தான்!
உ.பி: அகிலேஷுடன் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சந்திப்பு- பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா
பாஜக முனைப்பு
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என கருதி அக்கட்சியில் இருந்து அமைச்சர்கள் உட்பட எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
தொடர் ராஜினாமா
குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத் தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறி வருகின்றனர். அமைச்சராக இருந்த ஸ்வாமி பிரசாத் மவுரியாதான் முதன் முதலில் பாஜகவில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வர்மா, பகவதி சாகர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். பின்னர் நேற்று மற்றொரு அமைச்சர் தாராசிங் சவுகான், அவதார்சிங் பதானா ஆகியோர் பாஜகவை விட்டு வெளியேறினர்.
3-வது அமைச்சர் ராஜினாமா
இன்று மற்றொரு அமைச்சரான தரம்சிங் சைனி தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவை விட்டு வெளியேறினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ள 3-வது அமைச்சர் தரம்சிங் சைனி. மேலும் பால பிரசாத், முகேஷ் வர்மா, வினய் சாக்யா ஆகிய எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவைவிட்டு விலகினர்.
விலகியவர்கள் எண்ணிக்கை 10 ஆனது
பாஜகவில் இருந்து விலகியவர்கள் பெரும்பாலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். அவதார்சிங் பதானா என்பவர் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் இணைந்தார். இதுவரை பாஜகவை விட்டு 3 அமைச்சர்கள் உட்பட 10 எம்.எல்.ஏக்கள் விலகி உள்ளனர். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நரேஷ் சைனி, சமாஜ்வாதி எம்.எல்.ஏ ஹரி ஓம் யாதவ் ஆகியோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.