இ.வி.எம் மிஷின்களை எடுத்து சென்றதில் விதிமீறல் உள்ளது.. ஆனால் முறைகேடு இல்லை: உ.பி. தேர்தல் அதிகாரி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய புகார் உண்மைதான் என தேர்தல் அதிகாரி ஒப்புக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்ததாக ஒப்புகைச் சீட்டில் காட்டுகிறது என்கிற புகார் எழுந்தது. ஆனால் இதனை அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுகள் கூறப்பட்டன.
இந்த நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேட்பாளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டிருந்தார். இதனால் கண்கொத்தி பாம்பாக சமாஜ்வாதி கட்சியினர் இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். சில இடங்களில் வேட்பாளர்கள் பைனாகுலர் மூலம் 3 ஷிப்ட் போட்டு இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வேட்பாளர்களுக்கு தெரியாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவதாக அகிலேஷ் யாதவ் நேற்று பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறப் போகிறது. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகளைக் கொண்டு பாஜக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்துள்ளனர். உள்ளூர் வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது சமாஜ்வாதி கட்சியின் வாக்குகளை திருடுவதற்கு சமமானது என கொந்தளித்திருந்தார். இதேபோல் வாரணாசியிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக கூறி சமாஜ்வாதி கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர்.
அகிலேஷ் யாதவின் இந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு உண்மை என தேர்தல் அதிகாரிகள் மழுப்பலான ஒரு விளக்கம் அளித்துள்ளனர். வாரணாசி தேர்தல் ஆணைய அதிகாரி தீபக் அகர்வால் கூறுகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விதிமுறைகளை அதாவது புரோட்டகால் மீறி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது உண்மைதான். ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை மாற்றுவதற்காக அவை கொண்டு செல்லப்படவில்லை. சில பயிற்சிகளுக்காக கொண்டு செல்லப்பட்டது என்கிறார்.